ஹாக்கிங்.. தந்தை பாசம்.. ரொமான்ஸ்..ஆனாலும் எல்லாமே மிஸ்சிங்.. ரொம்ப லேட் ஜீவா! - கீ விமர்சனம்

தொழில்நுட்பம் மனித தேவைக்கே.. மனிதர்களை விழுங்குவதற்கல்ல... என்று ஸ்மார்ட்போன் உலகின் இணைய தகவல் திருட்டு பற்றி பேசுகிறது கீ. இந்த கீ ரசிகர்களுக்கு, சமூக விழிப்புணர்வினைத் திறந்துவிட்டதா?

கல்லூரி படிக்கும் சித்தார்த் (ஜீவா) டெக்னாலஜியில் புலி. கம்ப்யூட்டர், மொபைல் என எதுவென்றாலும் எளிதில் புகுந்து தகவலை திருடிவிடும் ஹாக்கிங் கில்லாடி. அதே ஊரில் இருக்கும் பலரை ஹாக்கிங் மூலமாக கட்டுப்படுத்தி குற்றங்களை செய்துவருகிறார் முகம் தெரியாக ஒரு வில்லன். அந்த ஹாக்கர்களால் ஜீவாவே நேரடியாக பாதிக்கப்படுகிறார். அவர்களால் ஜீவாவின் தோழியும், தந்தையுமே பாதிக்கப்படுவார்கள். யார் அந்த ஹேக்கர்ஸ், அவர்களைக் கண்டுபிடித்தாரா, எப்படி கண்டுபிடித்தார் என்பதே மீதிக்கதை.

ஜீவா வழக்கம் போல தன்னுடைய நடிப்பை அளவாக வழங்கியிருக்கிறார். கவர்ச்சியில் அனைக்காவும், நடிப்பில் நிக்கி கல்ராணியும் பொருந்துகிறார்கள். ஆர்.ஜே.பாலாஜியின் காமெடிகள் ஆங்காங்கே ஓர்க்-அவுட்டும் ஆகிறது. தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் மற்றும் சுஹாசினி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பிறகு தான் படம் கதைக்குள்ளே டிராவல் செய்கிறது. முதல் பாகத்தில் தேவையில்லாத எத்தனையோ காட்சிகள் இருக்கிறது. அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். அனைகாவுடனான ரொமாண்டிக் காட்சிகள், நிக்கியுடன் குலதெய்வகோவிலுக்கு செல்வது போன்ற காட்சிகளைக் கத்திரியிட்டிருக்கலாம்.

ஹாக்கிங் சம்பந்தமான ஒரு படம் இது. அது சார்ந்த எந்த சமூக விழிப்புணர்வையும் படம் ஏற்படுத்தவில்லை. தவிர, புத்திசாலி தனமான எந்த திரைக்கதையும் படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. நம்பகத்தன்மை இல்லாத வில்லத்தனம். அதாவது, செல்போன், வெப்கேம், ஏடிஎம், கம்ப்யூட்டர், கார், பேஸ் மேக்கர் என அனைத்தையும் நொடிப்பொழுதில் ஹேக் செய்வது எப்படி என்று தெரியவில்லை.

தகவல் திருட்டு என்கிற மிக முக்கியமான சமூக பிரச்னையை பேசியிருப்பதால் அறிமுக இயக்குநர் காளீஸூக்கு பாராட்டுகள். ஆனால் படத்தின் திரைக்கதையில் எந்தப் புதுமையும் இல்லை. படத்தின் மையக் கதையை விட்டுவிட்டு காதல், செண்டிமெண்ட், தந்தை பாசம் என டிராக் மாறுவதைத் தவிர்த்திருக்கலாம். ஜீவா என்ன படிக்கிறார், வில்லன் பெயர் என்ன என்று நிறைய விஷயங்களில் படத்தில் தெளிவில்லை. வில்லனாக வரும் கோவிந்த் ஈர்க்கிறார். விஷால் சந்திரசேகரின் இசை ஓகே ரகம்.

கடந்த 2016ஆம் ஆண்டே இந்தப் படம் தயாராகிவிட்டது. அப்போதே கீ படத்தின் டிரெய்லரும் வெளியானது. அந்த சமயத்தில் ஒரு டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்றால் அது கீ தான். அந்த அளவுக்கு இணைய மாஃபியா பற்றிய காட்சிகள் டிரெய்லரில் இருந்தது. ஆனால் படம் வெளியாவதில் பல சிக்கல். இப்படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் தான், சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட தயாரிப்பாளரும் கூட.

சிம்பு படத்தினால் ஏற்பட்ட கடன் சுமையால், கீ படத்தை வெளியாகமுடியாமல் திணறி, இப்பொழுது வெளியாகியிருக்கிறது. தாமதமான வெளியீடே படம் மீதான எதிர்பார்ப்பையும் குறைத்துவிட்டது. ஏனெனில், இரும்புத்திரை படம் வெளியாவதற்கு முன்பே இப்படம் வெளியாகியிருந்தால் அதிகமாகப் பேசப்படும் ஒரு படமாக கீ இருந்திருக்கும். அந்த வாய்ப்பை இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

மனிதர்கள் தான், கம்ப்யூட்டரை ஆளவேண்டும். கம்யூட்டர், மனிதர்களை ஆள விடக்கூடாது. இப்பொழுது பலர் மனிதத்தை மறந்து கம்ப்யூட்டராக மாறிவருகிறார்கள் எனவும், முன்பெல்லாம் நம்முடைய உணர்வுகளை டைரியில் எழுதுவோம். இப்போது சோசியல் மீடியாவில் எழுதுகிறோம். அதுவே நாம் செய்யும் பெரிய தவறு என்று சொன்ன இடத்தில் அசத்தல். தவிர, இலவசம் என்று கிடைக்கும் எதுவும் இலவசம் இல்லை என்பது இணையதளத்துக்கும் பொருந்தும்.

சமூக வலைதளத்தில் தனிப்பட்ட விஷயத்தை அதிகமாக பகிர்வது, இணையத்தில் தேவையில்லாத சைட்களை பார்ப்பது, இலவசம் என வருபவற்றை க்ளிக் செய்யாமல் இருப்பது என்றிருந்தால் நம்முடைய தகவல்களை யாரும் திருடாமல் முடிந்த அளவுக்கு பாதுகாக்கலாம். அதைத் தான் சொல்ல வந்து, ஓரளவுக்கு சொல்லவும் செய்திருக்கிறது இந்த கீ.

 

More News >>