வெறுப்பு காட்டுவதை விட, அன்பே வெற்றி தேடித் தரும் - ஓட்டளித்த பின் ராகுல் உற்சாகம்!

இந்தத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி வெறுப்பை பயன்படுத்தினார். ஆனால் அன்பையே பொழிந்த நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

மக்களவைக்கு 6-வது கட்டமாக இன்று நடைபெறும் தேர்தலில், டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முக்கிய பிரபலங்கள் பலரும் வாக்களித்து வருகின்றனர்.

ராஷ்ட்ரபதி பவனில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த வாக்கு மையத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது மனைவியுடன் வாக்களித்தார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, முன்னாள் கேப்டன் கபில்தேவ், கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான காம்பீர் உள்பட ஏராளமான பிரபலங்கள் வாக்களித்தனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புதுடெல்லி தொகுதிக்குட்பட்ட துக்ளக் லேன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், புதுடெல்லி தொகுதி வேட்பாளருமான அஜய் மக்கானுடன் வாக்குப்பதிவு மையத்துக்கு வந்த ராகுல் காந்தி தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, இந்த மக்களவைத் தேர்தலில் நாங்கள் அன்பை பயன்படுத்தி பிரச்சாரம் செய்தோம். ஆனால், பிரதமர் மோடி, வெறுப்பை பயன்படுத்தினார். இந்த தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி . இந்தப் போட்டியில், இறுதியில் அன்புதான் வெல்லும் என்று உற்சாகமாக ராகுல் காந்தி தெரிவித்தார் என்றார் ராகுல் காந்தி.

இந்தத் தேர்தலில் மக்களின் 4 முக்கியப் பிரச்னைகளை மையப் படுத்தி பிரச்சாம் மேற்கொண்டோம். குறிப்பாக வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பரிதாப நிலை, பணமதிப்பிழப்பு விவகாரம், கேலிக்கூத்தான ஜிஎஸ்டி வரி, ஊழல் மற்றும் ரபேல் போர் விமான விவகாரம் போன்றவற்றை முக்கியமாக மக்கள் முன் வைத்தோம் என்றார் ராகுல் காந்தி.

More News >>