வழக்கு மேல் வழக்கு போட்டாலும் ..? கமலின் நிலைப்பாட்டில் உறுதி..! மக்கள் நீதி மய்யம் திட்டவட்டம்

மலின் கருத்தை பிரிவினையைத் தூண்டும் சில அரசியல் அமைப்புகள் திட்டமிட்டு திரித்தும், திசை மாற்றியும், விஷமப் பிரச்சாரம் செய்து வருவதாகவும், மக்கள் நீதி மய்யம் கட்சி தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும் அக்கட்சி சார்பில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல், தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்து தீவிரவாதி என்று பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. தமிழகத்தில் உள்ள மற்ற பிரச்னைகள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டு, கமலைச் சுற்றியே 2 நாட்களாக சர்ச்சைகள் சுழன்றடிக்கின்றன. கமலின் பேசியதில் என்ன தவறு? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் என ஒரு தரப்பில் கமலுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பாஜக, அதிமுக மற்றும் இந்துத்வ அமைப்பினர் கமலின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். உச்சகட்டமாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையாகிவிட்டது. மேலும் கமலின் பேச்சுக்கு எதிராக டெல்லி, சென்னை, அரவக்குறிச்சி என பல இடங்களில் வழக்கு மேல் வழக்கு என வழக்குகளும் பதிவாகி கமலுக்கு நெருக்கடியை ஏற்படுத்த, தேர்தல் பிரச்சாரத்திற்கும் செல்ல முடியாமல் முடங்கி விட்டார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் நள்ளிரவில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கமல் கூறிய கருத்தை திரித்தும் திசை மாற்றியும், விஷமத்தனமான பிரச்சாரத்தில் சில அரசியல் இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப் பட்டுள்ளது.

கமல் பேசிய கருத்தினை இந்துக்களுக்கு எதிராக குறிப்பிட்டதாகக் கூறி விஷமத்தனமாக பரப்பி வருகின்றனர். கமலின் உரையில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இந்தியர் என்ற உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தான் கூறியுள்ளார். இந்த உயரிய நோக்கில் மக்கள் நீதி மய்யம் மக்களின் பேராதரவோடு பீடு நடை போட்டுக் கொண்டுள்ளது. மக்களுக்கான அரசியலை முன்னெடுத்துக் கொண்டே இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் தனது கருத்துக்களை வலியுறுத்திக் கொண்டே இருக்கும். மாட்சிமை பொருந்திய நீதிமன்றங்கள் மீதும், சட்டத்தின் மீதும் பெரும் மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளது மக்கள் நீதி மய்யம் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் மூலம் கமல் தான் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாகவே கூறியுள்ளதாகவே தெரிகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்பது போல அமைந்துள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அறிக்கை என்றே தெரிகிறது.

என்னை பதவி விலகச் சொல்ல கமல் யார் ?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீராப்பு

More News >>