மோடிஜி...உங்க செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்..! கிண்டலடித்த ராகுல் காந்தி

5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி, கேள்விகள் எதையும் எதிர்கொள்ளாமல், அமித் ஷாவை பதலளிக்கச் செய்ததற்கு, எக்ஸலன்ட் மோடிஜி.. இன்னும் போர் முடியவில்லை. அடுத்த முறை உங்களையே பதிலளிக்குமாறு அமித் ஷா கூறுவார் பாருங்களேன் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடையும் நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் செய்தியாளர் சந்திப்பு நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பை நேரலையில் பார்த்த ராகுல் காந்தி, செய்தியாளர்களின் கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் தவிர்த்ததைக் குறிப்பிட்டு விமர்சித்தார். ரபேல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, என்னுடன் ஏன் விவாதம் நடத்த வில்லை? என விமர்சனம் செய்தார்.

பின்னர் டிவிட்டரில் இது குறித்து கிண்டலாக பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, வாழ்த்துக்கள் மோடிஜி... உங்கள் செய்தியாளர் சந்திப்பு எக்ஸலன்ட்.. இதப் பார்க்கும் போது போர் பாதியளவு தான் முடிந்துள்ளது போல் தெரிகிறது. அடுத்த முறை ஓரிரு கேள்விகளுக்கு அமித் ஷாவே உங்களை பதிலளிக்கச் செய்து விடுவார் பாருங்கள் என்று கிண்டல் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் ராகுல் கூறுகையில், இந்தத் தேர்தலில் மக்கள் தீர்ப்பிற்கு தலைவணங்க காத்திருக்கிறோம் .பாஜகவிடம் உள்ள அதிகாரம், பண பலத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்தத் தேர்தலில் நிஜமான போட்டி நிலவியது.பிரதமர் மோடியின் குடும்பத்தை நான் மதிக்கிறேன். எங்கள் குடும்பத்தை மோடி விமர்சித்ததைப் பற்றி கவலைப்படவில்லை.கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம்.

இந்தத் தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை மக்கள் உற்று நோக்குகிறார்கள் மோடி என்ன பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளதில்லை தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாகவே செயல்பட்டது. மோடி பிரச்சாரம் செய்ய வசதியாகவே 7 கட்ட தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. பாஜகவும், மோடியும் நினைப்பதை தேர்தல் ஆணையம் செயலில் காட்டியது.

இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சியாக எங்கள் செயல்பாடு திருப்திகரமாக இருந்தது . யார் பிரதமர் என்பதை 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பின்னரே முடிவு செய்வோம்.மக்கள் தீர்ப்பை மதித்து, கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

More News >>