துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாகும் மே 23ம் தேதி! டி.டி.வி. தினகரன் உறுதி!!

மே 23ம் தேதியை துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், கட்சி தொண்டர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசியல் வரலாற்றில் புதியதோர் அத்தியாயத்தை படைக்க உள்ளோம். நெருக்கடிகள், அழுத்தங்கள், பொய் வழக்குகள் இவை அத்தனையையும் எதிர்கொண்டு, ஜெயலலிதாவின் தூய தொண்டர்களாக, ஜெயலலிதாவை போலவே எதற்கும் அஞ்சாமல் முன்னேறிச் சென்று தமிழகம், புதுச்சேரி உள்பட 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாம் தனி முத்திரை பதித்துள்ளோம்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, நமக்குத்தான் மக்களின் ஆதரவு என்பதை ஒவ்வொரு கணத்திலும் உணர முடிந்தது. 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் நாமே முன்னணியில் நிற்கிறோம். மே 23-ல் தமிழக அரசியல் ஒரு புதிய தொடக்கத்தை காணப்போகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழும். துரோக கும்பலை தமிழக மக்கள் அருவெறுப்பாக பார்க்கிறார்கள். ஆகையால், இந்த 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நம்முடைய முழு உழைப்பை அர்ப்பணித்திடுவோம். கவனம் சிதறாமல் ஒவ்வொரு வாக்கையும் பரிசு பெட்டகத்துக்கு கொண்டு வந்து சேர்ப்போம்.

தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் துரோக கும்பல் செய்த அக்கிரமத்துக்கும், ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த பெரும் துரோகத்துக்கும் சரியான பாடம் கிடைக்கப்போகிறது. உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பின் வலிமையால் அது சாத்தியமாகப் போகிறது. துரோகம் தோற்கவேண்டும் என்ற நம்முடைய எண்ணம் ஈடேறும் நாள் அருகில் வந்துவிட்டது. மே 23ம் தேதியை துரோகம் ஒழிக்கப்பட்ட நாளாக தமிழ் கூறும் நல்லுலகம் கொண்டாட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சூர்யாவுடன் போட்டிப்போட களமிறங்கிய பிரபுதேவா, நயன்தாரா !
More News >>