ஆஸ்திரேலிய தேர்தலில் ஆளும்கட்சி அமோக வெற்றி! கருத்துகணிப்புகள் பொய்யானது!!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மீண்டும் ஆளும்கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.ஆஸ்திரேலியாவில் 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு மே 18ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணிக்கும், பில் சார்ட்டன் தலைமையிலான லேபர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.ஆட்சியைப் பிடிப்பதற்கு 76 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற வேண்டும். சுமார். ஒரு கோடியே 64 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர். காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை வரை நடைபெற்றது.

வெளிநாடுகளில் நம்மூர் தபால் ஓட்டு போல் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை உள்ளது. இதைப் பயன்படுத்தி 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே வாக்களித்து விட்டனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் நம் நாட்டில் உள்ளது போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில், எதிர்க்கட்சியான லேபர் கட்சிக்கு 52 சதவீத ஆதரவும், ஆளும் லிபரல் தேசிய கூட்டணிக்கு 48 சதவீத ஆதரவும் உள்ளதாகவும், எனவே லிபரல் கூட்டணி 3 வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழக்கிறது என்றும் கூறப்பட்டது.வாக்குப்பதிவு முடிந்ததுமே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது. இன்று அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ஆளும் லிபரல் கூட்டணி 74 தொகுதிகளிலும், லேபர் கட்சி 65 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இதனால், ஆளும் கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது. கருத்துகணிப்புக்களை எல்லாம் உடைத்தெறிந்து பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான ஆளுங்கட்சி கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது. நாட்டின் 31வது பிரதமராக மீண்டும் மோரிசன் விரைவில் பதவியேற்க உள்ளார்.

 

தேர்தல் முடிவை தொடர்ந்து லேபர் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சார்ட்டன் விலகினார்.

More News >>