தேனி தொகுதியில் தில்லுமுல்லு... ஆதாரம் உள்ளது... வழக்குப் போடுவேன்..! ஈவிகேஎஸ் இளங்கோவன் காட்டம்..!!

தேனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்றும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர்.கடும் மும்முனைப் போட்டி நிலவிய இத் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பினர் பணத்தை அள்ளி வழங்குவதாகவும், வாக்கு எந்திரங்களில் தில்லு முல்லு நடத்த முயற்சிப்பதாகவும் ஆரம்பம் முதலே புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவுகளை தமிழகமே எதிர்பார்த்தது. வாக்கு எண்ணிக்கையின் போதும் பிரச்னைகள் வெடித்தது. முதல் சில ரவுண்டு ஓட்டு எண்ணிக்கையில் முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்தது. அமமுகவுக்கு பதிவான வாக்குகளை எந்திரங்களில் பூஜ்யம் என காட்டுவதாக தங்க .தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டினார். இதனால் சில மணி நேரம் வாக்கு எண்ணிக்கையே நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் பின் என்ன நடந்ததோ?ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி பெற ஆரம்பித்த ரவீந்திரநாத், 78 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ரவீந்திரநாத் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றதாக திமுக கூட்டணி மற்றும் அமமுகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில்,தேனி தொகுதியில் தேர்தலின் போது முறைகேடுகள் நடைபெற்றன. அதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. பணபலத்தால் உருவாக்கப்பட்டதே எனது தோல்வி. தன் மகன் ரவீந்திரநாத் வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் வாரணாசி சென்று பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்தார்.

தேனி தொகுதியில் தேர்தலின் போது தில்லுமுல்லுகள் நடந்தன. பல மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சீல் இல்லை. பணம் சுனாமியாகக் கொட்டியது. தேனியில் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்வேன். ஒப்புகைச் சீட்டு எந்திரங்களை மீண்டும் எண்ண வேண்டும்.

ஓபிஎஸ் மீது மோடிக்கு அவ்வளவு அக்கறை ஏன் என்று தெரியவில்லை. தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் மீது இல்லாத அக்கறை ஓபிஎஸ் மகன் மீது மோடிக்கு இருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு, தமிழகத்தில் அமைந்தது போன்ற கூட்டணி பல மாநிலங்களில் அமையாதது தான் காரணம். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்தது போல் மற்ற மாநிலங்களில் அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் ஒன்றிணையவில்லை. இதுவே காங்கிரஸின் தோல்விக்குக் காரணம்.

தமிழகம், கேரளா மாநில மக்களைப் போல வட இந்திய மக்கள் விவரம் உள்ளவர்களாக இல்லை. மோடியின் பிரச்சாரத்தில் அவர்கள் மயங்கிப் போய் விட்டனர். விரைவில அவர்கள் தெளிவு பெறுவார்கள் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் மகனுக்கு ஓவர் விசுவாசம் கைதான முன்னாள் காவலர்!

More News >>