பிரதமர் மோடியை சந்தித்த ஜெகன் மோகன் ரெட்டி - பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு!

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். வரும் 30-ந் தேதி தாம் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை வீழ்த்திய ஜெகன் மோகன் ரெட்டி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளையும் மண்ணைக் கவ்வச் செய்துள்ளார். 25 மக்களவைத் தொகுதிகளில் 22 இடங் களிலும், 175 சட்டசபைத் தொகுதிகளில் 152 இடங்களிலும் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் ஜெகன் மோகன்.

ஆந்திர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30-ந் தேதி பதவியேற்க உள்ள நிலையில் இன்று காலை டெல்லி சென்றார். பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஜெகன் மோகன் ரெட்டி, பாஜகவின் தேர்தல் வெற்றிக்கும், மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கும் வாழ்த்து தெரிவித்தார்.மேலும் வரும் 30-ந் தேதி நடைபெறவுள்ள தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறும் பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். அப்போது பிரதமர் மோடியும், ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

More News >>