எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார்... இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம்

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆகி விட்ட எச்.வசந்தகுமார், தனது நாங்குனேரி எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார். நாங்குனேரி தொகுதியில் கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் இடைத்தேர்தலிலும் காங்கிரசே போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என்றும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் எச்.வசந்தகுமார். இந்நிலையில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து வசந்தகுமார் போட்டியிட்டார்.

இதில் 4 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வசந்தகுமார், எம்.பி.யாக டெல்லிக்கு செல்கிறார். இதனால் நாங்குனேரி தொகுதி எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் ப.தனபாலிடம் வசந்தகுமார் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாங்குநேரி தொகுதியில் 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை 3 ஆண்டுகளில் நிறைவேற்றியிருக்கிறேன். எம்.பி.யாகி விட்டாலும் தொடர்ந்து எனது தனிப்பட்ட முயற்சியில் நாங்குனேரிக்கு பல நலத்திட்டங்களை செய்வேன் என்றார்.

நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? என்றதற்கு, கட்சித் தலைமை தான் முடிவுசெய்யும் என்றாலும், காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரியில் நல்ல செலவாக்கு உள்ளது. இதனால் காங்கிரஸ் போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வசந்தகுமார் தெரிவித்தார். வசந்தகுமார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 8 லிருந்து 7 ஆக குறைந்துள்ளது.

More News >>