மோடி அமைச்சரவையில் நிதிஷ் கட்சி பங்கேற்க மறுப்பு?

இரண்டு கேபினட் அமைச்சர் பதவி தரப்படாததால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மோடி அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.

பீகாரில் பா.ஜ.க கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சிகள் இடம் பெற்றன. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், பா.ஜ.க 17 இடங்களிலும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி 6 இடங்களிலும் வென்றன.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவி மட்டுமே தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதிஷ்குமார் தனது கட்சியில் ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.சி.பி.சிங், மக்களவை உறுப்பினர் ராஜீவ்ரஞ்சன் ஆகியோருக்கு கேபினட் அமைச்சர் பதவி தர வேண்டுமென்று கேட்டார். ஆனால், பா.ஜ.க. அதற்கு செவிசாய்க்கவி்ல்லை. இதையடுத்து, மோடி அமைச்சரவையில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடம் பெறவில்லை.

இது குறித்து நிதிஷ்குமார் கூறுகையில், ‘நாங்கள் 2 அமைச்சர் பதவி கேட்டோம். ஒன்று தருவதாக கூறினார்கள். அதனால், அதை ஏற்கவில்லை. ஆனாலும், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை என்றார்.

More News >>