மோடி 2வது ஆட்சியில் அமைச்சர்கள் பட்டியல்

பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி இன்று மீண்டும் பதவியேற்று கொண்டார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் மே 30ம் தேதி இரவு 7.05 மணிக்கு மோடி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கும் விழா தொடங்கியது. பிரதமராக பதவியேற்ற மோடிக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடவுள் பெயரில் உறுதிமொழி எடுத்து மோடி பதவியேற்றார். அவர் பதவியேற்றதும், விழாவில் கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதைத் தொடர்ந்து, ராஜ்நாத்சிங், அமித்ஷா ஆகியோர் அடுத்தடுத்து கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவையில் மோடியைத் தவிர, 24 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அந்த 24 கேபினட் அமைச்சர்கள் விவரம் வருமாறு:

ராஜ்நாத்சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, சதானந்த கவுடா, நிர்மலா சீத்தாராமன், ராம்விலாஸ் பஸ்வான், நரேந்திரசிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், தவார்சந்த் கெலாட், ஜெய்சங்கர், ரமேஷ் பொக்ரியால், அர்ஜன் முண்டா, ஸ்மிருதி இரானி, ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், முக்தார் அப்பாஸ் நக்வி, பிரகலாத் ஜோஷி, மகேந்திரநாத் பாண்டே, அர்விந்த் சாவந்த், கிரிராஜ் சிங், கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். எனவே, பிரதமருடன் சேர்த்து கேபினட்டில் 25 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தனிப்பொறுப்பு இணையமைச்சர்களாக சந்தோஷ் கேங்வார், ராவ் இந்திரஜித் சிங், ஸ்ரீபாட்நாயக், ஜிதேந்திரசிங், கிரண் ரிஜ்ஜூ, பிரகலாத் படேல், ஆர்.கே.சிங், ஹர்தீப்சிங் புரி, மன்சுக் மாண்ட்வியா ஆகிய 9 பேர் பதவியேற்றனர்.

இணை அமைச்சர்களாக பாக்கன்சிங் குலாஸ்தே, அஸ்வினி சவுபே, அர்ஜுன்ராம் மேவால், ஜெனரல் வி.கே.சிங், கிருஷ்ணன் பால் குர்ஜார், ராவ்சாகேப் தான்வே, கிஷான்ரெட்டி, புருஷோத்தம் ரூபாலா, ராம்தாஸ் அதவாலே, சாத்வி நிரஞ்சன் ஜோதி, பாபுல் சுப்ரியோ, சஞ்சீ்வ்குமார் பலியன், தோர்தே சஞ்சய் சாம்ராவ், அனுராக் தாக்குர், சுரேஷ் அங்கடி, நித்யானந்த் ராய், ரத்தன்லால் கட்டாரியா, முரளீதரன், ரேணுகா சிங் சரூடா, சோம்பிரகாஷ், ராமேஸ்வர் தெலி, பிரதாப் சந்திர சாரங்கி, கைலாஷ் சவுத்ரி, தேபஸ்ரீ சவுத்ரி ஆகிய 24 பேர் பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவில் வங்கதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர் உள்பட ‘பிம்ஸ்டிக்’ அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்பட ஏராளமான வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இம்முறை பா.ஜ.க.கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என்று சுமார் 6 ஆயிரம் பேர் கலந்து கொண்டதால், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அரங்கில் நடைபெறாமல் வெளியே புல்வெளியில் நடைபெற்றது.

More News >>