ஆந்திராவுக்கு இடமில்லை உ.பி.க்கு 10 அமைச்சர்கள்

மத்திய அமைச்சரவையில் ஆந்திரா, தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. அதே சமயம், உத்தரபிரதேசத்திற்கு 10 அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றார். அவருடன் 24 கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றனர். தனிப்பொறுப்பு இணையமைச்சர்கள் 9 பேரும், இணையமைச்சர்கள் 24 பேரும் பதவியேற்றனர். பிரதமரை சேர்க்காமல் மொத்தம் 57 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. மட்டும் ஒரேயொரு தொகுதியில் வெற்றி பெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே தேனியில் வென்றார். அவர் பெயர் கடைசி வரை அடிபட்டாலும் அவருக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. ஆயினும் கூட, பதவியேற்ற 24 கேபினட் அமைச்சர்களில் நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழர்கள்தான். அதே சமயம், இருவருமே டெல்லியிலேயே பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள்.

இதே போல், ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் ஒன்றில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. இதனால், ஆந்திராவுக்கும் ஒரு அமைச்சர் பதவி கூட தரப்படவில்லை. அதே சமயம், உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அதிகபட்சமாக 10 அமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, முக்தர் அப்பாஸ் நக்வி, மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் கேபினட் அமைச்சர்கள். சந்தோஷ் கேங்வார், ஹர்திப்சிங் புரி ஆகியோர் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்கள். வி.கே.சிங், சாத்வி நிரஞ்சன் ஜோதி, சஞ்சீவ் பலியன் ஆகியோர் இணையமைச்சர்கள் ஆவர்.

More News >>