உள்ளாட்சித் தேர்தல் எப்போது..? ஆகஸ்டில் நடத்த தயாராகிறது மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட தமிழக மாநிலத் தேர்தல் ஆணையம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2016 அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியாகி வேட்பு மனுத்தாக்கலும் நிறைவடைந்தது.இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் திடீரென தடை விதித்தது. அதன் பின் அந்த வழக்கு முடிவடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பல முறை கெடு விதித்தும், ஏதேனும் சாக்கு போக்கு கூறி, தமிழக தேர்தல் ஆணையம் காலம் கடத்தியே வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், ஏராளமான அடிப்படை மற்றும் வளர்ச்சிப் பணிகள் நடைபெறாமல் முடங்கிப் போயுள்ளது.

இந்நிலையில், மே மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கடந்த முறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் உறுதியளித்திருந்தது. ஆனாலும் இந்த மாதமும் இன்றோடு முடிவடைய உள்ள நிலையில், வரும் ஆகஸ்டில் தேர்தல் அறிவிப்பு என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறுகையில்,நகர, ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளுக்கான முதன்மை பயிற்சி வகுப்புகள் முடிவடைந்துள்ளன. மாவட்டந்தோறும், முதன்மை பயிற்றுநர்கள் அனைவரும் பிற ஊழியர்கள், பணியாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு குறித்த பயிற்சிகளை அளிப்பர்.

இந்தப் பயிற்சிகளுக்குப் பிறகு, வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கும். இந்தப் பணிகளை ஜூலை மாதத்துக்குள் முடிக்கவும், அதன் பின்பு ஆகஸ்ட் மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடவும் மாநிலத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புறங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கிராமப்புற ஊராட்சி தேர்தலில், வாக்குச் சீட்டு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>