உள்ளாட்சித் தேர்தலில் சீட் அ.ம.மு.க.வினருக்கு ஆசை காட்டும் அ.தி.மு.க

உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ கொடுப்பதாக கூறி, அ.ம.மு.க.வின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க.வினர் தீவிமாக இறங்கியுள்ளனர்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரேயொரு இடமாக தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மேலும், முதலமைச்சர் கடந்த முறை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே தி.மு.க. கட்சி, சுமார் 8 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது. இதே போல், ஓ.பி.எஸ்.சை தவிர மற்ற எல்லா அமைச்சர்களின் தொகுதிகளிலும் தி.மு.க.

 

கூட்டணி சுமார் 10 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கிறது. இதையடுத்து, தேர்தல் தோல்வி குறித்து அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் எந்த ஒரு முக்கிய நிர்வாகியையும் குறை கூறவில்லை. யாரைச் சொன்னாலும் பதிலுக்கு மற்றவர்களைச் சொல்லுவார்கள்.

 

அது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்ற பயத்தில் விட்டுவிட்டார்கள். எனினும், கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நிர்வாகிகளிடம், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தனியே விசாரணை நடத்துமாறு முதலமைச்சர் கூறியிருக்கிறார். அத்துடன், டி.டி.வி. தினகரன் கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரையும் மீண்டும் அ.தி.மு.க.விற்கு இழுக்க அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தினகரனின் அ.ம.மு.க. கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், 2ம் கட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள் போன்றவர்களை இழுக்கும் வேலைகளை அமைச்சர்கள் துவக்கியுள்ளனர்.

அமைச்சர்களின் சார்பில் சிலர், அ.ம.மு.க.வினரை தொடர்பு கொண்டு பேரம் பேசுகின்றனர். அந்த முக்கியப் பிரமுகர்களுக்கு அவர்களின் சொந்த ஊரில் உள்ள செல்வாக்கு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் சீட் தருவதாக பேரம் பேசப்படுகிறது. அதாவது, கவுன்சிலர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகள் விட்டு தரப்படும் என்று பேசப்படுகிறதாம். இதனால், இன்னும் சில நாட்களில் அ.ம.மு.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு மேலும் பலர் தாவக் கூடும் என தெரிகிறது.

More News >>