உதவுதல் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்: மகள்களுக்கு ஏஞ்சலினா ஜோலியின் அறிவுரை

ஹாலிவுட் பிரபலம் ஏஞ்சலினா ஜோலி தன் மகளுக்கு பகிர நினைக்கும் வாழ்க்கை மந்திரத்தை சமீபத்தில் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு வெளிப்படுத்தினார். அந்த ஒரு சின்ன கருத்துதான் தற்போது ஹாலிவுட் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

சர்வதேச அளவில் லேடி சூப்பர் ஸ்டாராகக் கருதப்படுபவர் ஏஞ்சலினா ஜோலி. வாழ்க்கையில் சிறு வயதிலிருந்தே பல்வேறு விதமான சவால்களையும் சந்தித்துக் கடந்து வந்தவர். தனது சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் அளவில்லா இடர்களைச் சந்தித்துக் கடந்து வந்தவர். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து முழுவதுமாக மீண்டு மீண்டும் களத்தில் கலக்கியவர். உலகில் போர், வறட்சி எனப் பாதிக்கப்பட்ட அத்தனை நாடுகளுக்கும் சென்று தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார். குழந்தைகளைத் தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார். 

மூன்று மகன்கள், மூன்று மகள்களுக்குத் தாயான ஏஞ்சலினா ஜோலி தன் மகளுக்கு 'பெண்கள் தினம்' தொடர்பான ஒரு பேட்டியின் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய முக்கிய நோக்கம் குறித்து எடுத்துக்கூறியுள்ளார். இதைச் சொல்லித்தான் என் பிள்ளைகளை வளர்ப்பேன் என்றும் கூறியுள்ளார்.

ஏஞ்சலினா ஜோலி கூறுகையில், "மற்றவர்களுக்கு உதவும் போதுதான் நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும். உங்களது உடைகளும் ஒப்பனைகளும் உங்களை விளக்காது. அதையும்தாண்டி நீங்கள் மனதளவில் எப்படிப்பட்டவர் என்பதுதான் உங்களுக்கான அறிமுகமாக இருக்கும். உங்களுக்கான சுதந்திரம் உலகில் உள்ள அத்தனை பேருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உதவுங்கள், உழையுங்கள்" என்றுள்ளார்.

 

More News >>