மலச்சிக்கலால் அவதிப்படுகிறதா குழந்தை? இவற்றை ட்ரை பண்ணுங்க!

தினமும் இருமுறை மலம் கழிப்பது ஆரோக்கியம். ஆனால் பலருக்கு இருநாளுக்கு ஒருமுறை கூட வெளிக்கு வருவதில்லை. ஐயோ, கஷ்டம்!

பெரியவர்களுக்கே மலச்சிக்கல் சிரமத்தை அளிக்கிறது என்றால், குழந்தைகள் மலம் கழிக்காவிட்டால் எவ்வளவு சிரமம்?

உங்கள் குழந்தை சாப்பிட மறுக்கிறதா? வயிறு கல்போல உள்ளதா? அப்படியானால் பிள்ளைக்கு மலச்சிக்கல் இருக்கக்கூடும். குழந்தையின் மலத்தில் இரத்தம் வெளிப்பட்டால், வெளிக்குச் செல்லும்போது வலியால் வேதனைப்பட்டால் மலச்சிக்கலை உறுதி செய்துகொள்ளலாம். பொதுவாக சிறுபிள்ளைகளுக்கு அடிவயிற்று தசைகள் போதிய வலுப்பெற்றிருக்காது. இதுவும் சரியாக மலம் வெளியேற முடியாமைக்கு ஒரு காரணம். பிள்ளை மலம் கழிக்க முடியாமல் சிரமப்பட்டால் ஏதேதோ மருந்துகளை கொடுத்து பிஞ்சு வயிற்றினை இன்னும் புண்ணாக்குவதைக் காட்டிலும் வீட்டிலேயே சில இயற்கை வழிகளில் முயற்சி செய்து பார்க்கலாம்.

நார்ச்சத்து மிக்க உணவு

திடஉணவு சாப்பிடக்கூடிய குழந்தை என்றால் சாப்பிடும் உணவுப்பொருள்கள் நார்ச்சத்து நிறைந்தவையாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். தோல், தவிடு ஆகியவை நீக்கப்படாத கோதுமை, ஓட்ஸ், பார்லி, சோளம், கம்பு, கேழ்வரகு, தினை போன்ற முழு தானியங்கள் மற்றும் சிவப்பு அரிசி ஆகியவை மலக்குடலில் கழிவு வெளியேறுவதற்கு உதவும். பேரிக்காய், குழிப்பேரி, பிளம்ஸ், தோல் நீக்கப்பட்ட ஆப்பிள் ஆகியவற்றை குழந்தைகளுக்குத் தந்தால் மலச்சிக்கல் எளிதாக தீரும்.

நீர்ச்சத்து

சிறிது அதிகமாக திரவ உணவுகளை சேர்த்துக்கொள்வது குழந்தைக்கு இருக்கும் மலச்சிக்கலை தீர்க்கும். திரவ உணவு, சிறுகுடலுக்குள் சென்று மலம் வெளியேற தூண்டுகிறது. ஆப்பிள் ஜூஸ் மற்றும் ப்ரூன் எனப்படும் உலர்பழங்களின் ஜூஸ் மலச்சிக்கலிலிருந்து விடுதலை தரும்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சீனிக்கிழங்கு என்று அழைக்கப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் ஏ மற்றும் பி, மாவுச்சத்தான கார்போஹைடிரேட் ஆகியவை உள்ள. சர்க்கரைவள்ளிக் கிழங்கை மசித்து கிண்ணத்தில் வைத்து குழந்தை சாப்பிடுவதற்கு ஏற்றாற்போல் ஒன்று அல்லது இரண்டு கரண்டிகள் ஊட்டலாம்.

பேரிக்காய் மற்றும் உலர்பழங்கள்

பேரிக்காய் மற்றும் ப்ரூன் எனப்படும் உலர்பழங்கள் இவற்றுடன் கிராம்பு சேர்த்து கூழாக அடித்து குழந்தைக்கு தந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ருசியுள்ளதாக இருப்பதால் குழந்தை இதை விரும்பி உண்ணும். எளிதாக மலம் கழியும்.

யோகர்ட் என்னும் சுவையூட்டப்பட்ட தயிர்

சிறுவர் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் மலச்சிக்கலிலிருந்து விடுதலை தருவது யோகர்ட். பூசணி மற்றும் உலர்பழங்களை யோகர்ட்டுடன் கலந்து ஒரு கரண்டி அளவு குழந்தைக்கு தரலாம். மலச்சிக்கலை தீர்ப்பதுடன் செரிமான கோளாறுகளையும் குணப்படுத்தும்.

வறுத்த பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகத்தை வறுத்து அதை நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த நீரை தினமும் குழந்தைக்கு ஒன்று அல்லது இரண்டு கரண்டி குடிக்க கொடுக்கலாம். இது செரிமானத்தை தூண்டி எளிதாக மலங்கழிய உதவும்.

More News >>