அதிமுக பொதுச் செயலாளர் யார்? எடப்பாடியா, செங்கோட்டையனா...

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும், செங்கோட்டையனை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.வில் பல்வேறு குழப்பங்கள் வெளியில் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அப்படியே மறைத்து கட்சியை நடத்துவதற்கு எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சி பண்ணியும் அது நடக்கவி்லலை. மதுரை வடக்கு எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா, ‘கட்சிக்கு யாருக்கு அதிகாரம்? ஒற்றைத் தலைமை இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியவி்லலையே...’’ என்று கொளுத்திப் போட்டு விட்டார்.

அவர் என்ன பேசினார், அதற்கு என்ன நடவடிக்கை என்று எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் முடிவெடுப்பதற்குள் அடுத்த எம்.எல்.ஏ.வும், பெரம்பலூர் மாவட்டச் செயலாளருமான குன்னம் ராமச்சந்திரன், செல்லப்பாவின் கருத்தை ஆமோதித்து பேசி வீடியோ வெளியிட்டு விட்டார். அது மட்டுமல்ல, தனது குடும்பத்தின் வளமைக்காக சுயநலத்துடன் கழகத்தை வளைத்து செயல்படக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வத்தை போட்டு தாக்கினார். அதாவது, ‘‘ஓ.பி.எஸ் தனது மகனுக்கு மந்திரி பதவி பெறுவதற்காக கட்சியை காவு கொடுக்கிறார்’’ என்று மறைமுகமாக குத்திக் காட்டினார். அதே சமயம், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ‘‘அம்மா இருந்தால் ராஜன்செல்லப்பா இப்படி பேசுவாரா?’’ என்று செல்லப்பாவுக்கு எதிர்ப்பு காட்டினார்.

இது இன்னும் பெரிய சர்ச்சையாகி விடாமல் தடுப்பதற்காக ஜூன் 12ம் தேதி அ.தி.மு.க. அமைச்சர்்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். இணைந்து அறிக்கை வெளியிட்டனர். கட்சிப் பிரச்னைகளை யாரும் வெளியில் பேசக் கூடாது என்றும் அறிக்கை விட்டனர். அறிவித்தபடி இன்று அந்த ஆலோசனை கூட்டம், கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நேரடியாக சந்தித்து கொள்ளாமல் நிகழ்ச்சிகளை தவிர்த்து வந்தனர். இதற்கு பின்புதான், ராஜன்செல்லப்பா, குன்னம் ராமச்சந்திரன் பேச்சுகள் சர்ச்சையை கிளப்பின. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ராஜன்செல்லப்பாவும், எடப்பாடிக்கு ஆதரவாக குன்னம் ராமச்சந்திரனும் பேசுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், அது எதையும் காட்டிக் கொள்ளாமல் பன்னீசெல்வமும், எடப்பாடியும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி காட்சி தந்தனர். கூட்டம் தொடங்கும் முன்பு இருவரும் ஒன்றுமே நடக்காதது போல் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, அ.தி.மு.க அலுவலக வாசலில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ‘‘புதிய பொது செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே! அதுவே அனைத்து தொண்டர்களின் எதிர்பார்ப்பு’’ என்று குறிப்ப்ிடப்பட்டிருக்கிறது.

இதேபோல், அ.தி.மு.க.வில் செங்கோட்டையனை பொதுச் செயலாளராக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சிவகங்கை மாவட்டத்தில் சிலர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு எப்படி சிவகங்கை மாவட்டத்தில் ஆதரவு உள்ளது என்று விசாரித்தபோது, அவர் மறைமுகமாக சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாகவே உள்ளார் என்றும் அதனால் சசிகலா ஆதரவாளர்கள்தான் அந்த போஸ்டரை ஒட்டியிருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

More News >>