உங்களை வளர்த்த விதம் சரியில்லே : விஷால் மீது வரலட்சுமி பாய்ச்சல்

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு வாக்கு கேட்டு விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் சரத்குமார் மீது மீண்டும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கோபத்துடன், ‘உன்னை வளர்த்த விதம் சரியில்லே...’’ என்று போட்டு தாக்கியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. ஆரம்பத்தில் இந்த அணிக்கு எதிர்ப்பே இல்லாத நிலை காணப்பட்டது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திடீரென பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரில் பலமான அணி உருவானது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், விஷால் நேற்றிரவு தனது ட்விட்டர் பக்கத்தில், பாண்டவர் அணிக்கு ஓட்டு கேட்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், நடிகர் கார்த்தி, கருணாஸ், விஷால், நாசர் ஆகியோர் கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய காட்சிகள் இடம் பெற்றன. அதில் ராதாரவியையும், சரத்குமாரையும் கடுமையாக தாக்கியிருந்தனர். ஆதலால் வரலட்சுமி விஷால் மோதல் ஆரம்பித்துள்ளது. சங்கத்தின் நிலத்தை விற்று முறைகேடு செய்து விட்டனர், தாங்களே நிரந்தரமாக பதவியில் இருக்க விதிகளை மாற்றியுள்ளனர் என்றெல்லாம் குற்றச்சாட்டு கூறியிருந்தனர்.

இதைப் பார்த்ததும், சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி கொதிப்படைந்துள்ளார். விஷாலும், வரலட்சுமியும் காதலிப்பதாக ஒரு காலத்தில் செய்திகள் வெளியாயின. அதன்பின்பும், அவர்கள் நட்பாகவே இருந்தனர். இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட தனது தந்தையை தேவையில்லாமல் விஷால் வம்புக்கு இழுப்பதாக கருதி, வரலட்சுமி கோபம் கொண்டுள்ளார். அவர் இன்று(ஜூன் 14) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விஷாலுக்கான கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நீங்கள் போட்டிருக்கும் தேர்தல் பிரச்சார வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். நீங்கள் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயிருப்பதைப் பார்த்து, உங்கள் மீது வைத்திருந்த மரியாதை முற்றிலுமாக போய்விட்டது, எனது தந்தை மீது நீங்கள் கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போன பிறகு அதையே திருப்பி சொல்லியிருக்கிறீர்கள். சட்டம்தான் பெரியது என்று சொல்வீர்கள். எனவே, என் தந்தை மீதான குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் அவர் தண்டிக்கப்பட்டு இருப்பாரே?

நீங்கள் கற்றுக் கொண்டது அவ்வளவுதான். அந்த தரம்தாழ்ந்த வீடியோவை பார்த்தால், அதற்கு உங்களைச் சொல்லி குற்றமில்லை. நீங்கள் வளர்ந்த விதம் அப்படி என்று சொல்ல வேண்டும். நீங்கள் உத்தமராக இருந்திருந்தால், உங்களிடம் இருந்தவர்களை தனியாக பிரிந்து சென்று தனி அணியாக ஏன் போட்டியிட வேண்டும்?

இதுவரை உங்கள் மீது மரியாதை வைத்து, நண்பராக இருந்தேன். ஆனால், இப்போது சங்கத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை சொல்லாமல் இப்படி வெளியிட்டிருக்கும் வீடியோவைப் பார்த்தால், அந்த மரியாதையே சுத்தமாக போய் விட்டது. திரைக்கு வெளியிலும் நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள். உண்மை எப்போதும் வெல்லும் என்ற வார்த்தையை திருப்பி சொல்கிறேன்.

இவ்வாறு வரலட்சுமி காட்டமாக பதிவிட்டிருக்கிறார்.

பாக்யராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு?
More News >>