உங்க முதுகுல தான் ஆயிரம் அழுக்கு மூடை.. வரலட்சுமியை தொடர்ந்து ராதிகாவும் விஷால் மீது பாய்ச்சல்

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக விஷால் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் சரத்குமார் மீது விஷால் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அவரது மகள் வரலட்சுமி கடும் பதிலடி கொடுத்த நிலையில், ராதிகா சரத்குமாரும் கடுமையான பதில் விமர்சனம் செய்துள்ளார். உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூடைகளை சுமந்து கொண்டு அடுத்தவர் மீது பழி சுமத்துவது, பிச்சைக்காரன் வாந்தி எடுப்பது போல உள்ளது என ராதிகா விமர்சித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது.நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 69 பேர் போட்டிக் களத்தில் உள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு அணியினரும் போட்டி போட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விஷால் அணி சார்பாக தேர்தல் பிரசாரத்துக்காக வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நடிகர் சங்கப் பெற்றுப்பில் இருந்த போது முறைகேடு செய்ததாகக் கூறப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி, விஷாலை உங்கள் வளர்ப்பு அப்படி.. என் ஒரு வாக்கை இழந்து விட்டீர்கள் என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளால் சாடியிருந்தார்.

இப்போது நடிகை ராதிகா சரத்குமாரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விஷாலை கன்னாபின்னாவென்று வறுத்தெடுத்துள்ளார். அதில்,சரத்குமார் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை என்றும், நடிகர் சங்கத்தில் முறைகேடு ஏற்பட்டது என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் கூறியிருப்பது பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது மாதிரி வேடிக்கையாக இருக்கிறது.

விஷால் ரெட்டி அவர்களே நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரைக்கும் எதையாவது நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது, முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா?படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா?

இன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது என்று வழக்கம்போல் ஓடி ஒளிந்து கொள்வார். இப்படியே நீங்கள் பிரவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒரு போதும் உதவாது. இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள் என்று ராதிகா சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

உங்களை வளர்த்த விதம் சரியில்லே : விஷால் மீது வரலட்சுமி பாய்ச்சல்
More News >>