போராடும் மே.வங்க மருத்துவர்களுக்கு ஆதரவு: நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தம்

மே.வங்கத்தில் போராடி வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மே.வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் இருவர் தாக்கப்பட்டதை கண்டித்து, அம்மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களை கடந்த வியாழக்கிழமை சந்திக்கச் சென்ற மம்தா பானர்ஜி, 4 மணி நேரத்தில் போராட்டத்தை கைவிடாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என எச்சரித்தார். மம்தாவின் இந்த எச்சரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர்கள் போராட்டம் தீவிரமானது. மே.வங்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் அரசுப்பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

மேலும் போராடும் மே.வங்க டாக்டர்களுக்கு ஆதரவாகவும், மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கோரியும் நாடு முழுவதும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6 மணி முதல் தொடங்கிய டாக்டர்களின் 24 மணி நேரப் போராட்டத்தால் பல்வேறு மாநிலங்களில் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை தவிர்த்து பிற சிகிச்சைகள் எதுவும் வழங்கப்படாததால் வெளிநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்திலும் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.. எஸ்மா போன்ற கடுமையான சட்டங்களை பயன்படுத்த விரும்பவில்லை என்றும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்தும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மேற்கு வங்க மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மே.வங்கத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

முலாயமுக்கு உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி
More News >>