தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தாம் கொடுத்த அறிக்கையில் கூறியிருந்த யோசனைகளை அரசு பின்பற்றி இருந்தால், இப்போது தண்ணீர் பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பிரச்னையால் தமிழகமே கண்ணீர் விட்டு கதறுகிறது. குடிநீருக்காக மக்கள் தெருக்களில் காலிக்குடங்களுடன் அல்லாடுகிறார்கள். நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால் குளிக்க, கழிவறை செல்ல, பாத்திரங்கள் கழுவ என புழக்கத்திற்குக் கூட தண்ணீர் இன்றி தமிழக மக்கள் அல்லாடுகிறார்கள்.

தண்ணீர் பிரச்னை அதிதீவிரமாகி, தலைக்கு மேல் வெள்ளம் என்பது போல ஆன நிலையில் இப்போது தமிழக அரசுத் தரப்பில் அவசரக் கூட்டம் நடத்தி முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அவசர ஆலோசனைகள் மூலம் தற்போதைக்கு தற்காலிக தீர்வை வேண்டுமானால் தரலாமேயொழிய, நிரந்தத் தீர்வை ஒரு போதும் தரப்போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதி தான்.

இந்நிலையில் தான் நியாயத்துக்கும், நேர்மைக்கும் பெயர் போன ஐஏஎஸ் அதிகாரியான சகாயம், தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து 20 வருடத்துக்கு முன்பே அரசுக்கு அறிக்கை கொடுத்தேன்...ஆனால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை... என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த தாழம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் பணியாற்றிய போது தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து ஆய்வு நடத்தினேன். அதனை அப்போதே அறிக்கையாக அரசிடம் கொடுத்தேன். அந்த அறிக்கையில், சென்னையைச் சுற்றிலும் உள்ள 1500 -க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை ஒரு மீட்டர் ஆழம் தூர்வாரி மழை நீரை சேமித்து வைத்தால் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

நான் அறிக்கையில் கூறிய ஆலோசனைகளை அரசுகள் செயல்படுத்தியிருந்தால் இப்போது பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று வருத்தத்துடன் கூறிய சகாயம் ஐஏஎஸ், இனிமேலாவது அரசு செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

'ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர்' - எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
More News >>