எந்தச் சூழ்நிலையில் ஓட்டம் பிடிப்பீர்கள் தெரியுமா?

வேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி! - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள்.

விலங்குகள் மட்டுமல்ல, மனிதர்களாகிய நாமும் சூழலுக்கேற்ப, இடத்திற்கேற்ப நடந்து கொள்வோம். சாதகமான சூழல், சாதகமற்ற சூழல் என்று வெவ்வேறு நிலைகளில் மனித மனம் வெவ்வேறு விதமாய் செயல்படும். பயம், மனக்கலக்கம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவை சூழலை தைரியமாய் எதிர்கொள்வது, தப்பித்துக் கொள்ள இடத்தை விட்டு ஓடுவது போன்றவற்றை நாம் செய்வதற்கு காரணமாகின்றன.

சண்டையிடுதல்: நம்மை காத்துக்கொள்ளவேண்டிய தருணம் வரும்போது, சண்டையிடுவது இயல்பான ஒன்றுதான். மற்றவர்களை அதட்டுவது, குரலை உயர்த்தி கத்துவது, அந்த சமயத்திற்கு வேண்டுமானால் நமக்கு கொஞ்சம் தன்னம்பிக்கையை தரலாம். ஆனால், அது சூழலுக்கு நிரந்தர தீர்வாக அமைய முடியாது. அப்படி நடந்துகொண்டால் பின்னர் நாம் வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். எந்தச் சூழலையும் கனிவாக எதிர்கொள்வதே சிறந்தது.

அகலுதல்: சில நபர்களை, சில சூழல்களை நாம் தவிர்க்க எண்ணி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுதல். இப்படிச் செய்யும்போது சூழல் தவிர்க்கப்படலாமே தவிர, மனஅழுத்தம் உண்டாகும். இதுவும் தற்காலிகமான ஒரு தீர்வுதான். சூழல் மாறாமலே இருந்தால் மீண்டும் மீண்டும் நாம் அவதை தவிர்க்க நேரிடும்.

உறைதல்: சில சூழல்களுக்கு நம்மால் எதிர்வினையே ஆற்ற இயலாது. நடப்பதை பார்த்து அப்படியே உறைந்துபோய்விடுவோம். அதிர்ச்சியில் என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய்விடுதல்.

குண்டக்க மண்டக்க: சூழலை எதிர்மறையாக கையாளும் யுக்தி. மனஅழுத்தமும் கலக்கமும் உள்ள சூழலை எதிர்கொள்ள இது அவ்வளவு நல்ல வழியல்ல. சூழல் இறுக்கமாக இருக்கும்போது நிலையை சரிசெய்ய ஜோக் சொல்லலாம். ஆனால், பிரச்னையை எதிர்கொள்வதை விட்டுவிட்டு திசைதிருப்பும்வண்ணம் வேடிக்கையாக, சில்லறைத்தனமாக செயல்படுவது மெச்சத்தக்கதல்ல.

அழுத்தமான சூழலை எதிர்கொள்வது எளிதான விஷயமல்ல. முதலில் சூழ்நிலை அப்படி மாற காரணம் என்ன என்று தெளிவாக பார்க்கவேண்டும். உங்களால் மாற்றக்கூடிய அளவில் நிலைமை இருந்தால் அதற்கான முயற்சியை செய்யலாம். உங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்றால், நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற ரீதியில் விட்டுவிடலாம்.

அழுத்தம் உங்களை மேற்கொள்ள விடாதீர்கள். சூழலை எதிர்கொள்ளுங்கள். முடிந்த அளவு எது நல்ல தீர்வாக அமையும் என்று நிதானமாக யோசியுங்கள். தீர்வு அகப்பட்டே தீரும்!

ஆரோக்கியமாக வாழ்ந்திடணுமா? நாய் வளருங்க
More News >>