ஒரே தேசம், ஒரே தேர்தல் பிரதமர் மோடியின் கருத்துக்கு பிரதான கட்சிகள் எதிர்ப்பு - அதிமுகவும் ஒதுங்கியது

"ஒரே தேசம், ஒரே தேர்தல்" எனும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் புறக்கணித்தன.

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானவுடன் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை திடீரென முன்வைத்துள்ளார். இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்களை கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்..

மேலும் வரும் 2022-ம் ஆண்டின் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவை இந்த ஆண்டு கொண்டாடுவது குறித்து விவாதிக்கவும் திட்டமிடப்பட்டு இன்று மாலை கூட்டம் நடைபெற்றது.

ஆனால் மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு நாட்டில் உள்ள முக்கிய கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணித்தன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக தலைவர் முக ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ், ஆகியோர் கூறி விட்டனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் கடைசி நேரத்தில் புறக்கணித்து விட்டது. சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் பரூப் அப்துல்லா,ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவுக்கும், ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்துவதில் உடன்பாடு இல்லை. இதனால் டெல்லி சென்றிருந்த தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கடைசி நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதிமுக தரப்பின் கருத்தை கடிதம் மூலம் தெரிவித்து விட்டு கூட்டத்தில் பங்கேற்பதை அதிமுக நாசூக்காக ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் அடிதடி..! செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்
More News >>