குடிநீர் பிரச்னை ஜூன் 22-ந் தேதி முதல் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களைத் திரட்டி வரும் 22-ம் தேதி முதல் அமைதியான முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;உள்ளாட்சித்துறை அமைச்சரின் அக்கறையற்ற தன்மையால் குடிநீரின்றி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் வீண் வதந்திகளை பரப்புவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க அமைச்சர் முயற்சி செய்கிறார்.

குடிநீர் பஞ்சமே தமிழகத்தில் இல்லையென பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அமைச்சர் சொல்வது போல் நிலைமை இல்லை.தண்ணீர் பிரச்சினை தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது.

தண்ணீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவும், குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களைத் திரட்டி வரும் 22-ம் தேதி முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். இப் பிரச்சினையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் வகையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

'ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர்' - எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
More News >>