தமிழர்கள் சினிமா மோகம் பிடித்தவர்கள் நல்லது ஏன் செய்யணும்?- சு.சாமியின் வக்கிரத்தை பாருங்க

சென்னையை தண்ணீர் பிரச்னையில்லாத நகரமாக சுப்பிரமணிய சாமியால் ஆறே மாதத்தில் மாத்திக் காட்ட முடியுமாம். ஆனால் சினிமா மோகம் பிடிச்ச தமிழக மக்கள், சினிமாக்காரர்களுக்குத் தானே ஓட்டுப் போடுகின்றனர். அதனால் நல்ல யோசனை சொல்ல மாட்டேன் என்ற ரீதியில் டுவிட்டரில் பதிவிட்டு, சுப்பிரமணிய சாமி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிக்கவும், அன்றாட புழக்கத்திற்கும் தண்ணீரைத் தேடி மக்கள் அலை பாய்கின்றனர். தலைநகர் சென்னையோ தண்ணீர் .. தண்ணீர்... என்று தவியாய்த் தவிக்கிறது.ஆனாலும் இந்தப் பிரச்னையை தமிழக அரசு போர்க்கால அவசரத்தில் அணுகுவதாகத் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் வேலுமணியோ, தண்ணீர் பிரச்னை என்று திட்டமிட்டு வதந்தியை பரப்புகிறார்கள் என்று காமெடியன் போல் தமாஷ் செய்திருந்தார். முதல்வர் எடப்பாடியும் மழை பொய்த்துவிட்டது... மழை வரும் வரை மக்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்று பல்லவி பாடுகின்றார். மேலும் உண்மை நிலவரத்தை ஒத்துக் கொள்ளாமல் எங்கோ ஓரிரு இடங்களில் உள்ள தண்ணீர் பிரச்னையை தமிழகம் உள்ளது போன்று மாயத் தோற்றத்தை உருவாக்குவதாக அவர் பங்குக்கு தமாஷ் செய்திருந்தார்.

இந்நிலையில் தான் அதி மேதாவி அரசியல்வாதியான சுப்பிரமணிய சாமியிடம் இதற்கு தீர்வு இருக்கலாம். எனவே அவர் முயற்சி எடுப்பாரா? என்று டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு உடனடியாக பதில் தெரிவித்து பதிவிட்டுள்ள சு.சாமி, சென்னையை தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நகரமாக ஆறே மாதத்தில் மாற்றிக் காட்ட முடியும். ஆனால் என்ன செய்வது? தமிழர்கள் சினிமா மோகம் பிடித்தவர்களாக இருக்கிறார்களே.. என்ன நல்லது செஞ்சாலும் சினிமாக்காரர்களுக்குத் தானே ஓட்டுப் போடுவார்கள்... என்று ஒரு இழு.. இழுத்து, தமிழக மக்களுக்கு அப்படியெல்லாம் நல்லது செய்ய முடியாது என்பது போல பதிவிட்டு தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த சுப்பிரமணிய சாமிதான் 25 வருடங்களுக்கு முன்பு மதுரையில் வந்து டேரா போட்டார். அகில இந்திய ஜனதா கட்சி என்ற கட்சியை வைத்துக் கொண்டு, தமிழக அரசியலில் காலூன்ற நினைத்தார்.மதுரையைசிங்கப்பூர் ஆக்கிக் காட்டுவேன். வைகையில் பாலாறும் தேனாறும் ஓடச் செய்வேன் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்தார். இதை நம்பி ஓட்டுப் போட்டு இவரை எம்.பி.யாகவும் ஒரு முறை வெற்றி பெறச் செய்து கடைசியில் மதுரை மக்கள் ஏமாந்தது தான் மிச்சம். அதன் பின் தமிழக அரசியலில் சுப்பிரமணிய சாமியின் பருப்பு வேகாமல் போய்விட்டது.

பழைய வஞ்சத்தை மனதில் வைத்துக் கொண்டு, தமிழக மக்களை சினிமா மோகம் பிடித்தவர்கள் என்று தனது வக்கிரத்தை சு.சாமி பதிவிட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. சு.சாமியின் இந்தக் கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், பலரும் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

'ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர்' - எஸ்.பி.வேலுமணி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
More News >>