ட்ரூகாலர் வாய்ஸ் - கட்டணமில்லா இணைய அழைப்பு

தொடர்பு செயலியான 'ட்ரூகாலர்', ட்ரூகாலர் வாய்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. உயர்தரம் வாய்ந்த இணைய அழைப்புகளை செய்வதற்கு இப்புதிய வசதி உதவும்.

ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ட்ரூகாலர் 2009ம் ஆண்டு ஆலன் மாமேடி மற்றும் நாமி ஸாரிங்கலாம் என்பவர்களால் நிறுவப்பட்டது. பயனர்கள், தங்களை அழைப்பவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ட்ரூகாலர் செயலி உதவி வருகிறது. ட்ரூகாலரை இந்தியாவில் தினசரி 10 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இலக்கினை ட்ரூகாலர் கடந்த பிப்ரவரி மாதமே எட்டிவிட்டது. உலக பயனர் எண்ணிக்கையில் இது 60 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதுமுள்ள 14 கோடி பயனர்களும் புதிய அம்சமான ட்ரூகாலர் வாய்ஸை பயன்படுத்தி இணையவழி அழைப்புகளை செய்ய முடியும். கட்டணமில்லாத, உயர்தரம் கொண்ட, நேரதாமத பிசிரற்ற அழைப்புகளை வைஃபை அல்லது மொபைல் டேட்டா மூலம் வேகமாக செய்ய முடியும்.

மொபைல் அழைப்பு, குறுஞ்செய்தி (text), அரட்டை (chat), செய்திகளை வடிகட்டுதல் (filter), தேவையற்ற அழைப்புகளை தடை செய்தல், பணமற்ற பரிவர்த்தனை (digital payment) போன்ற எல்லா செயல்பாடுகளையும் ஒரே செயலி மூலம் பயனர்கள் செய்துகொள்ள வசதியாக இம்முயற்சியை எடுத்திருப்பதாக ட்ரூகாலர் நிறுவனத்தின் தயாரிப்பு துறை துணை தலைவர் ரிஷ்ஹிட் ஜுன்ஜுன்வாலா தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத தொடக்கத்திலேயே இப்புதிய அம்சத்தை ட்ரூகாலர் அறிவிப்புகளின்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. முறைப்படியான அறிமுகம் ஜூன் 18ம் தேதி செய்யப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் இவ்வசதி விரைவிலேயே ஐஓஎஸ் பயனர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சண்டையை விலக்கி விட சென்ற கூலித்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி
More News >>