என்னது... தெலுங்குதேசம் பா.ஜ.க.வுடன் இணைந்து விட்டதா?

தெலுங்குதேசத்தின் மாநிலங்களவை கட்சி, பா.ஜ.க. மாநிலங்களவை கட்சியுடன் இணைந்து விட்டதை ஏற்றுக் கொண்டு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒய்.எஸ்.சவுத்ரி, ஜி.எம்.ரமேஷ், ஜி.மோகன்ராவ், டி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் 2 நாட்களுக்கு முன்பு, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர். பின்னர், பா.ஜ.க. தலைவர்களுடன் சென்று மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசு தலைவருமான வெங்கய்யா நாயுடுவை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அதில், ‘‘தெலுங்குதேசத்தின் மாநிலங்களவைக் கட்சியை பா.ஜ.க. மாநிலங்களவை கட்சியுடன் இணைப்பதாகவும், அரசியல் சட்டத்தின் 10வது அட்டவணையில்(கட்சித் தாவல் தடைச் சட்டம்) கூறப்பட்டுள்ள விதியின்படி ஒரு கட்சியின் மூன்றில் இரு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிந்து வந்து இன்னொரு கட்சியுடன் இணைந்தால் அதை இணைப்பாக ஏற்று கொள்ள வேண்டும். எனவே, எங்களை பா.ஜ.க. உறுப்பினர்களாக அங்கீகரிக்க வேண்டும்’’என்று கூறியிருந்தனர்.

ஆனால், இவர்களை பா.ஜ.க.வுடன் இணைப்பது கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறும் செயல் என்று தெலுங்குதேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சியின் கல்லா ஜெயதேவ் எம்.பி. தலைமையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 5 பேர், வெங்கய்யா நாயுடுவை சந்தித்து, ஒரு மனு அளித்தனர். அதில், ‘‘அரசியல் சாசனச் சட்டத்தின் 10வது அட்டவணைப்படி, ஒரு நாடாளுமன்றக் கட்சியை இன்னொரு நாடாளுமன்றக் கட்சியுடன் இணைப்பதற்கு மூன்றில் 2 பங்கு உறுப்பினர்கள் தேவை என்று விதி இருப்பது உண்மைதான்.

ஆனால், அதே சமயம் ஒரு நாடாளுமன்றக் கட்சியை இன்னொரு நாடாளுமன்றக் கட்சியுடன் இணைப்பதற்கு அந்த கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இணைக்கப்பட வேண்டும். அனைத்து மட்டத்திலும் கட்சிகள் இணைந்தால் மட்டுமே நாடாளுமன்றத்திலும் இணைப்பு என்பது சட்டப்படி சரியாகும். எனவே, 4 தெலுங்குதேசம் எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் சேர்ந்ததை ஏற்கக் கூடாது’’ என்று கூறியிருந்தனர்.

ஆனால், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தெலுங்குதேசத்தின் மாநிலங்களவை கட்சியை, பா.ஜ.க. மாநிலங்களவை கட்சியுடன் இணைக்கும் முடிவை ஏற்று கொண்டு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இதையடுத்து, தெலுங்குதேசம் கட்சி, குடியரசு துணை தலைவரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் என்று தெரிகிறது.

துணை சபாநாயகர் பதவி கேட்கவி்ல்லை: யூகங்களுக்கு ஜெகன் முற்றுப்புள்ளி
More News >>