இது டிரெய்லர்தான் மேடம்... மம்தாவை மிரட்டும் பா.ஜ.க

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியில் இருந்து 6வது எம்.எல்.ஏ. விலகி, பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மேலும், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உள்பட 10 கவுன்சிலர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது, பா.ஜ.க.வும், திரிணாமுல் கட்சி மோதிக் கொண்டன. ஸ்பீடு பிரேக்கர் என்ற மம்தாவை மோடி கிண்டல் செய்தார். மம்தாவே, ‘எக்ஸ்பயரி பிரைம் மினிஸ்டர்’ என்று மோடியை கிண்டல் செய்தார். மேலும், அமித்ஷா பிரச்சாரத்தின் போது வன்முறை வெடித்தது.

தேர்தல் முடிந்த பின்பும், மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வுக்கும், திரிணாமுல் கட்சிக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன. வன்முறைச் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மம்தா பானர்ஜியை வெறுப்பூட்டும் வகையில் அவரது கட்சியினரை பா.ஜ.க. இழுத்து வருகிறது. ஏற்கனவே 5 எம்.எல்.ஏ.க்கள், 52 கவுன்சிலர்களை பா.ஜ.க. இழுத்து விட்டது.

இந்நிலையில், தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கல்சினி தொகுதி எம்.எல்.ஏ. வில்சன் சாம்ப்ரமாரி என்பவரும், அந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிப்லாப் மித்ராவும் திரிணாமுல் கட்சியில் இருந்து விலகி இன்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தனர். இவர்களுடன் தெற்கு தினாஜ்பூர் மாவட்டக் கவுன்சிலர்கள் 9 பேரும் பா.ஜ.க.வுக்கு தாவியுள்ளனர்.

தெற்கு தினாஜ்பூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலில் மொத்தம் 18 உறுப்பினர்கள் உண்டு. அதில் தலைவர் உள்பட 10 கவுன்சிலர்கள் பா.ஜ.க.வுக்கு தாவி விட்டதால், அந்த மாவட்ட பஞ்சாயத்து தற்போது பா.ஜ.க.வசம் வந்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் மம்தாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த திரிணாமுல் மூத்த தலைவர் முகுல்ராய், அப்ேபாது பா.ஜ.க.வில் சேர்ந்தார். அவர்தான் தற்போது திரிணாமுல் கட்சியில் முக்கிய தலைகளை தூக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இது வெறும் டிரெய்லர்தான், இனிமே தான் முழு படத்தையும் மம்தா பார்க்கப் போகிறார். இன்றைக்கு சேர்ந்திருப்பவர்கள், முதல் கட்டத்தின் விரிவாக்கம் என்று எடுத்து கொள்ளுங்கள். இன்னும் 6 கட்டங்களில் ஆட்கள் வருவார்கள். அப்போது மம்தா பானர்ஜி கட்சி கலகலத்து விடும். சட்டமன்றத் தேர்தலிலும் தோற்று விடுவார்கள்’’ என்றார்.

மத்திய அரசு எச்சரிக்கை? மம்தா அரசு விளக்கம்
More News >>