பிரிட்ஜ் வெடித்து சிதறியது நிருபர், மனைவி, தாய் பலி

சென்னை புறநகரில் நள்ளிரவில் பிரிட்ஜ் வெடித்து சிதறி, தொலைக்காட்சி நிருபர், மனைவி மற்றும் தாய் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த திருமங்கை மண்ணன் தெருவை சேர்ந்த பிரசன்னா(32). தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அர்ச்சனா தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். பிரசன்னா, அர்ச்சனா(28), தாய் ரேவதி(59) நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென பிரிட்ஜ்ஜில் ஏதோ ேகாளாறு ஏற்பட்டு வெடித்து சிதறியிருக்கிறது. இதில் அறை முழுவதும் புகைமூட்டமானதுடன் தீப்பற்றி விபத்து ஆகியிருக்கிறது. இதனால், மூவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வெளியேற முடியாமல் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலையில், வேலைக்கார பெண் வந்து கதவைத் தட்டிய போது, நீண்ட நேரமாக கதவை திறக்காதது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வீட்டினுள் இருந்து புகை வருவதையும் கவனித்த அவர் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களை வரவழைத்தார். அதன்பின், கதவை உடைத்து உள்ளே சென்ற போது மூவரும் சடலமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதன்பின்பு, தீயணைப்பு துறைக்கும், சேலையூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து உடல்களை எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

ஓ.என்.ஜி.சி பைப்லைனில் கேஸ் கசிவு..! கிராம மக்கள் ஆவேசம்
More News >>