ஹெல்மெட் விவகாரம் காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

இரு சக்கர வாகனங்களில் பயணிப்போகுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிட்டும் அதை அமல்படுத்தாதது ஏன்? என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துகளில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது என்றும், ஹெல்மெட் கட்டாயம் என்பதை கடுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில், இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை அமல்படுத்த காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு சில நாட்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது இன்னும் நடவடிக்கையை தீவிரப்படுத்தாதது ஏன்? நடவடிக்கை வேண்டாம் என உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனரா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

போலீசார் தாக்கல் செய்துள்ள அறிக்கை திருப்தியளிக்காவிட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால், அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்பதை சென்னை காவல்துறை ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

More News >>