உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய வீரர்கள் சீருடையில் மாற்றம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் அணியும் சீருடையின் நிறம், ஆரஞ்சு நிறமாகியுள்ளது. அடுத்து நடைபெற உள்ள இரு போட்டிகளுக்கு மட்டும் இந்த சீருடை அணிந்து இந்திய வீரர்கள் ஆட உள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடரில், இதுவரை இந்திய அணி வீரர்கள் நீலநிற சீருடையுடன் விளையாடி வருகின்றனர். இதே நிறத்திலான சீருடையையே இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி வீரர்களும் அணிந்து ஆடி வருகின்றனர். அடுத்து வரும் இரு போட்டிகளில் இந்த இரு அணிகளுடன் இந்தியா ஆட உள்ளது. ஒரே வண்ண சீருடையில் இரு அணிகளும் போட்டியில் பங்கேற்றால் குழப்பம் ஏற்படும்.

இதனால் ஏதேனும் ஒரு அணி தனது சீருடையை வேறு வண்ணத்திற்கு மாற்ற வேண்டும் என்பது ஐசிசி விதி. இதனால் நாளை இங்கிலாந்து அணியுடனும், 6-ந் தேதி இலங்கையுடனும் இந்திய அணி விளையாட உள்ள போட்டிகளில் இந்திய வீரர்கள் புதிய சீருடையில் களம் இறங்குவர் என்று கூறி, முதலில் அதனை அறிமுகம் செய்தனர். முழுக்கவும் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த சீருடையைக் கண்டு பல தரப்பிலும், விளையாட்டிலும் காவி நிறமா? என்ற எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் இப்போது சீருடையில் ஆரஞ்சு வண்ணத்துடன் முன்பகுதியில் மட்டும் கருநீல நிறத்தை இணைத்து புதிய சீருடையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சீருடையுடன் நாளை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் முதன்முதலாக களம் இறங்க உள்ளனர். இந்த புதிய சீருடையில் இந்திய வீரர்கள் முகமது சமியும், லோகேஷ் ராகுலும் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளனர்.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றி தொடர்கிறது... மே.இந்திய தீவுகளை விரட்டியடித்தது
More News >>