புதிய தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபியாக திரிபாதி பொறுப்பேற்றனர்

தமிழக புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சண்முகமும், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட திரிபாதியும் இன்று பொறுப்பேற்றனர்.

இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனும், சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரனும் இன்று ஓய்வு பெற்றனர். இதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட சண்முகம் இன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார். அவருக்கு அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதே போன்று சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட திரிபாதியும் இன்று காவல்துறைத் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதற்கிடையே டிஜிபி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற டி.கே.ராஜேந்திரனுக்கு தமிழக காவல்துறை சார்பில் வழியனுப்பு விழா நடைபெற்றது.சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுத்து வந்து டி.கே.ராஜேந்திரனுக்கு மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர். ஓய்வு பெற்ற டி.கே.ராஜேந்திரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் மரியாதை நிமித்தம் சந்தித்து வாழ்த்துப் பெற்று, நன்றி கூறி விடைபெற்றார்.

தமிழக புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம் ; டிஜிபி பதவியில் திரிபாதி
More News >>