கிரண்பேடிக்கு முத்தரசன் கண்டனம்..! தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள் என்பதா?

தமிழக மக்கள் குறித்து இழிவாக பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுனருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஈரோட்டில் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வரலாறு காணாத கடும் வறட்சி நிலவும் நிலையில் இது குறித்து அரசின் கவனத்திற்கு சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் கொண்டு சென்றுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. புதுச்சேரி துணைநிலை ஆளுனர் தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு ஊழல் நிறைந்த அரசு என குற்றம் சாட்டியதோடு மக்களையும் கோழைத்தனமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார். இது கண்டனத்திற்குரியது.

புதுச்சேரி மாநிலத்தில் சர்ச்சைக்குரிய நபராக இருக்கிறார், நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குகள் உள்ள சூழலில், தமிழ்நாட்டையும், அரசையும், மக்களையும் பற்றி தவறாக பேசி இருப்பது கண்டனத்திற்குரியது. கிரண்பேடிக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன் இது குறித்து சட்டமன்றத்தின் கவனத்திற்கு ஸ்டாலின் கொண்டு சென்ற பொது, சபை நடவடிக்கை குறிப்பில் இருந்து நீக்கி இருப்பதும் அது பற்றி பேச அனுமதி மறுத்ததும் நல்ல ஜனநாயகம் அல்ல.

துணைநிலை ஆளுநருக்கு இந்த அரசு அச்சப்படுகிறது. கல்வி கொள்கை, காவிரி விவகாரம், நீட் தேர்வு போன்றவற்றில் மத்திய அரசுக்கு அடிமை போல் உள்ளது. மேலும் மாநிலத்தின் மரியாதையை இழப்பதற்கு இந்த அரசு தயாராக உள்ளது. அடிமை போல் செயல்படும் அரசு அதன் தொடர்ச்சியாக கிரண்பேடி குறிப்பிட்டதை கண்டித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். அது தமிழகத்தின் தன்மானத்தை காக்கும் செயலாக இருக்கும்.

ஆனால் எதிர்கட்சி தலைவர் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அவை குறிப்பில் இருந்து நீக்கியது நல்ல ஜனநாயகம் அல்ல. தமிழக முதலமைச்சரே கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி தமிழகத்தின் தன்மானத்தை காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். 

-தமிழ் 

புதுச்சேரியில் நீடிக்கும் அதிகார மோதல்... இப்போது முதல்வர் நாராயணசாமிக்கு தடை
More News >>