மிடில் ஆர்டரில் இந்தியா சொதப்பல்... வங்கதேசத்துக்கு 315 ரன்கள் இலக்கு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்களின் சொதப்பல் ஆட்டம் தொடர்கிறது . வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித்தும், லோகேஷ் ராகுலும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், அடுத்து வந்த வீரர்கள் சொதப்பியதால் 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 314 ரன்கள் எடுத்தது.

பர்மிங்ஹாமில் வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் முதல் விக்கெட்டுக்கு அபாரமாக ஆடி 29.2 ஓவரில் 180 ரன் சேர்த்தனர். 90 பந்தில் சதம் அடித்த ரோகித், அடுத்து ஒரு பவுண்டரி அடித்த திருப்தியுடன் 104 ரன்னில் வெளியேறினார். ராகுல் 77 ரன்களில் அவுட்டாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிரடி காட்டத் தவறினர். ரிஷப் பாண்ட் மட்டும் 41 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் கோஹ்லி 26 ரன்களிலும், பாண்ட்யா ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். உலகக் கோப்பை போட்டியில் முதல்முறையாக களம் இறங்கிய தினேஷ் கார்த்திக்கும் (8), ஏமாற்றினார். தோனி வழக்கம் போல அதிரடி காட்டத் தவறினார். முஸ்தபிகுர் வீசிய கடைசி ஓவரில் தோனி (35), புவனேஷ்வர் (2), ஷமி (1) அடுத்தடுத்து விழ, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் சேர்த்தது. இதனால் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் ஆடி வருகிறது.

வங்கதேச அணி தரப்பில் முஸ்தபிகுர் 5 விக்கெட் சாய்த்தார். இன்றைய போட்டியிலும் சதமடித்த ரோகித் சர்மா, இந்தத் தொடரில் இதுவரை 4 சதமடித்து ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இலங்கையின் சங்ககராவுடன் பகிர்ந்து கொண்டார். அத்துடன் இந்தத் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

More News >>