சமூகப்பணியில் ஈடுப்படும் தெலங்கானா: மூடிய சிறைகளை ஆதரவற்றோர் இல்லமாக மாற்ற முடிவு

ஐதராபாத்: குற்றங்கள் குறைந்து அதனால் கைதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதால் மூடப்பட்ட சிறைச்சாலைகளை ஆதரவற்றோர்களுக்கான இல்லமாக மாற்ற தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் மற்றும் கிளைச்சிறைகள் உள்ளன. இங்கு, பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடைத்து வைத்து வந்தனர். ஆனால், இங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கைதிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்ததால், பல மாவட்டங்களில் உள்ள சுமார் 14 கிளைச் சிறைகளை மூடி சிறைத்துறை நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 4 கிளைச்சிறைகளை மூட சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மூடப்பட்ட சிறைகளை ஆதரவற்றோர்கள், கைவிடப்பட்ட பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆகியோருக்கான இல்லமாக மாற்ற சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி வி.கே சிங் கூறியதாவது: மூடப்பட்ட சிறைகளை ஆதரவற்றோர், கைவிடப்பட்ட பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லமாக மாற்றுவது தொடர்பாக அரசிடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், மருத்துவர்கள், தன்னார்வலர்கள், மனநல ஆலோசகர்கள் பணிக்கு பணிக்கு அமர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களை கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கலாம் எனவும் திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு அரசுத்துறையே சமூகப்பணியில் இறங்குவது இதுவே முதல்முறை.இவ்வாறு அவர் கூறினார்.

More News >>