உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மாத்யூஸ் அபார சதம் கைகொடுக்க இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்தது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.லீட்சில் நடைபெறும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதிக்கு ஏற்கனவே முன்னேறி விட்ட இந்தியாவை, அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்ட இலங்கை அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு தரப்பட்டு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணியின் வீரர்கள் கருணாரத்னே (10) குஷால் பெர்னாண்டோ (18) ஆகியோர் பும்ராவின் வேகத்தில் விரைவில் அவுட்டாகினர். அவிஷ் பெர்னாண்டோ (20) பாண்ட்யாவின் வேகத்தில் வீழ, ஜடேஜாவின் சுழலில் குஷால் மென்டிஸ் (3) சிக்க, 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

அதன் பின் ஏஞ்சலோ மாத்யூஸ், திரிமானே ஜோடி அபாரமாக ஆடி சரிவிலிருந்து மீட்டது. மாத்யூஸ் சதம் கடந்து 113 ரன்களும், திரிமானே (53) அரைசதம் எடுத்து அவுட்டாகினர். இதனால் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது.இந்தியத் தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கும் பட்சத்தில், புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் பெறும். அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றால் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதும்.

More News >>