நாடு திரும்ப டிக்கெட் கிடைக்கல.. எதிர்பாராத தோல்வியால் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோதனை

உலக கோப்பை அரையிறுதியில், எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி வீரர்களுக்கு மேலும் ஒரு சோகம் நேர்ந்துள்ளது. டிக்கெட் கிடைக்காததால் உடனடியாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் லீக் சுற்று ஆட்டங்களில் அதிரடி காட்டிய இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் டாப் இடத்தை பிடித்தது. இதனால் 4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து அணியை அரையிறுதியில் எளிதில் வென்று, இந்த முறை கோப்பையை இந்தியாவே வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களும், கிரிக்கெட் வாரியமும் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது உண்மை.

ஆனால், நடந்ததோ அனைவருக்கும் அதிர்ச்சியாகிவிட்டது. மழை குறுக்கீட்டால் இரண்டு நாட்கள் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றுவிட்டது இந்தியா. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்களை கடந்த 3 நாட்களாக பலரும் பலவிதமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்பாராத தோல்வி தந்த சோகத்தில் இருந்த இந்திய அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தனர். நேற்றிரவு தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் லண்டன் விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். அப்போதுதான் அவர்களுக்கு மேலும் ஒரு சோதனையாக அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. இந்தியா வரும் விமானத்தில் வீரர்களுக்கு டிக்கெட் பதிவு செய்யப்படவில்லை என்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.

உலக கோப்பை தொடரில் இந்தியா அசத்தி வருவதால் எப்படியும், இறுதிப் போட்டி முடியும் வரை லண்டனில் தான் இருக்கப் போகிறோம் என்று நம்பிக்கையுடன் இருந்துள்ளனர் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள். இதனால் முன்கூட்டி பயணத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் விட்டு விட்டனர். மேலும் அரையிறுதியில் எதிர்பாராத தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்த நிர்வாகிகள், கடைசி நேரத்திலும் யோசிக்காமல் கோட்டை விட்டு விட்டனர் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் அரக்கப்பறக்க முயற்சித்த போது டிக்கெட் கிடைக்காமல் போய்விட, இந்திய அணி வீரர்கள் மீண்டும் தங்கள் ஹோட்டல் அறைகளுக்குச் சென்று சோகத்துடன் முடங்கிக் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இனிமேல், உலககோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை , லண்டனில் தங்கியிருந்து அன்றிரவு தான் வீரர்கள் நாடு திரும்ப டிக்கெட் வாங்கப்பட்டுள்ளதாம். இதனால் தாங்கள் கெத்தாக விளையாட வேண்டிய இறுதிப் போட்டியை, வெறும் பார்வையாளர்களாக சோகத்துடன் பார்க்க வேண்டிய சோதனையான சூழலும் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட் ; திக்.. திக்... போட்டி...! இந்தியாவின் கதையை முடித்தது நியூசிலாந்து
More News >>