துன்புறுத்தும் செய்திகளை தடுக்கும் இன்ஸ்டாகிராம்

ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் மனதை துன்புறுத்தும் மற்றும் கிண்டல் செய்யும் செய்திகளும், பொய்யான செய்திகளும் பரவுவதாகவும் அதை தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றும் பரவலாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

பயனர்கள் பலர் துன்புறுத்தலை எதிர்கொள்வதால் இன்ஸ்டாகிராமில் அதுபோன்ற செய்திகளை தடுக்க புதிய தடுப்பம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பதின்ம வயதினரில் 59 விழுக்காட்டினரும், பிரிட்டனில் 12 முதல் 20 வயதுக்குள்ளான இளைஞரில் 42 விழுக்காட்டினரும் துன்புறுத்தலை எதிர்கொள்வதாக கணக்கெடுப்பு ஒன்று கூறியுள்ளது.

பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி வேண்டாத செய்திகளை கண்காணித்து வருவதாக கூறியுள்ள இன்ஸ்டாகிராம், அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம், ஆட்சேபகரமான பதிவை செய்ய இருக்கும்போதே பயனரை எச்சரிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன் மூலம் பயனர்கள் 'இதை பதிவேற்றம் செய்வதில் உறுதியாய் இருக்கிறீர்களா?' என்ற எச்சரிக்கை செய்தியை பெறுவார்கள். தாங்கள் செய்யப்போகும் பதிவு ஆட்சேபத்துக்குரியது என்பதை உணர்ந்து, பதிவை தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

மட்டுறுத்தல் (restrict) என்னும் புதிய அம்சமும் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயனர், இன்னொரு பயனரை மட்டுறுத்தினால், இவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் நேரத்தை மற்றவர் அறிய முடியாதென்றும், அவரது நேரடி செய்திகளை வாசித்த நேரத்தை தெரிந்துகொள்ள முடியாதென்றும் கூறப்படுகிறது.

More News >>