முகப்பருவை முற்றிலும் போக்க எளிய வழிகள்

முகத்தில் இருக்கும் பருக்களை போக்குவதற்கு எல்லா வழிகளையும் முயற்சித்து பார்த்து அயர்ந்துபோய் விட்டீர்களா? தோல் மருத்துவர், கை மருத்துவம் என்று பல மருத்துவங்களை பார்த்தும் பலனில்லையா? இந்த எளிய வழிகளை முயற்சித்துப் பாருங்கள்! அதன்பிறகு உங்கள் முகத்தை உங்கள் கண்களே நம்பாது; அவ்வளவு அழகாயிருவீங்க!

தேனுக்கு நம் உடலிலுள்ள நச்சுப்பொருள்களை அகற்றும் இயல்பு உண்டு. இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடியது தேன். தேனை பயன்படுத்தி முகப்பரு பிரச்னையிலிருந்து விடுதலை பெறலாம்.

தேனும் சமையல் சோடாவும்:

இரண்டு மேசைக்கரண்டி அளவு தேனை எடுத்து, ஒரு மேசைக்கரண்டி சமையல் சோடாவுடன் கலந்திடவும். இந்தக் கலவையை முகத்தில் இருக்கும் பரு மற்றும் கட்டிகள் மேல் பூசவும். விரலில் தொட்டு, வட்டவடிவில் விரலை சுழற்றி (circular motion) தடவவும். ஐந்து நிமிடங்கள் காத்திருந்து பின்னர் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவும். மூன்று அல்லது ஐந்து நாள்களுக்கு ஒருமுறை இப்படி செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தேனும் மஞ்சள் தூளும்:

ஒரு மேசைக்கரண்டி அளவு தேனை எடுத்து அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை கலக்கவும். இரண்டையும் நன்கு குழைத்து, சரும பாதிப்புள்ள இடத்தில் பூசவும். அரைமணி நேரம் காத்திருந்து, நன்கு உலர்ந்தவுடன் வெதுவெதுப்பான நீரால் கழுவவும். வாரம் ஒருமுறை இதைச் செய்து வந்தால் முகப்பரு மறைந்து முகம் பொலிவு பெறும்.

தேனும் ஆப்பிள் சிடர் வினிகரும்:

ஆப்பிள் சிடர் வினிகரில் கரிம அமிலங்கள் அடங்கியுள்ளன. முகப்பருவுக்குக் காரணமாகும் நுண்ணுயிரிகளை கொல்லக்கூடிய திறன் இந்த அமிலங்களுக்கு உண்டு. இரண்டு மேசைக்கரண்டி தேன் எடுத்து, ஒரு மேசைக்கரண்டி தண்ணீர் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலக்கவும். நன்கு கலந்தபிறகு பஞ்சில் எடுத்து முகத்தில் உள்ள பருக்களின் மீது பூசவும். சருமம், இதை உள்ளிழுத்துக் கொள்ளும் வண்ணம் இலேசாக மசாஜ் செய்வது போல் அழுத்தவும். நாற்பது நிமிடங்கள் கழிந்த பிறகு நீரால் கழுவவும்.

தேனும் கிரீன் டீயும்:

கிரீன் டீ பை ஒன்றை வெந்நீரில் சில நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் எடுத்து குளிர வைத்து திறக்கவும். உள்ளே இருக்கும் தேயிலையுடன் ஒரு மேசைக்கரண்டி தேனை கலந்து பசைபோல் பிசையவும். இந்த கிரீன் டீ, தேன் கலவையை முகத்தில் உள்ள பருக்கள் மீது பூசவும். இருபது நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

தேனும் நார்த்தையும்:

நார்த்தங்காயின் தோலின் மேற்பக்கத்தை சீவி (zest) எடுத்துக் கொள்ளவும். நார்த்தம்பழச் சாறு அரை தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு, ஒரு மேசைக்கரண்டி அளவு தேன் மற்றும் சர்க்கரை அனைத்தையும் கலந்திடவும். நார்த்தையின் சீவப்பட்ட தோலுடன் சேர்த்து கலந்திடும்போது சொரசொரப்பான பசைபோன்று மாறும். இதை முகப்பருக்கள் மீது பூசவும். அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள்.குறித்த இடைவெளியில் இவற்றை செய்து வந்தால், முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும்; முகம் மாசு மருவில்லாமல் ஜொலிக்கும்.

முதுகெலும்பின்மேல் அக்கறையா? இவற்றில் கவனமாயிருங்கள்!
More News >>