உலக கோப்பை திருவிழா இன்றுடன் நிறைவு..! யாருக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?

இன்று உலக கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக ரூ 27.36 கோடி கிடைக்க உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்ற பிற அணிகளுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

இங்கிலாந்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த உலக கோப்பை திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. உலகின் பழம்பெருமையான, கிரிக்கெட் வீரர்கள் சொர்க்கபுரி மைதானம் எனப் போற்றப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வென்று, கோப்பையைக் கைப்பற்றி உலக சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு கிடைக்கப் போகும் பரிசுத்தொகை ரூ 27.36 கோடி (4 மில்லியன் அமெரிக்க டாலர்)ஆகும் . தோற்கும் அணிக்கு அதில் பாதியாக ரூ 13.68 கோடி (2 மில்லியன் அமெரிக்க டாலர்) கிடைக்கும்.

இதே போன்று அரை இறுதிச் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணிக்கு கிடைக்கப் போகும் தொகை ரூ 8.10 கோடி ஆகும். இந்தக் கணக்கு எப்படியெனில், லீக் சுற்றில் பெற்ற வெற்றி ஒவ்வொன்றுக்கும் தலா 27 லட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய். அந்த வகையில் 7 போட்டிகளில் வென்றதற்கு ஒரு கோடியே 92 லட்சத்து 25 ஆயிரத்து 500 கிடைக்கும். அரையிறுதிக்கு முன்னேறியதற்காக கூடுதலாக 68 லட்சமும் கிடைக்கும். அரையிறுதியில் தோற்றதற்காக ஆறுதலாக 5 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரம் என மொத்தம் 8.10 கோடி ரூபாய் இந்திய அணிக்கு கிடைக்கும். இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கும் இதே அளவுக்கு பரிசு கிடைக்கும். மற்ற அணிகள் லீக் சுற்றில் பெற்ற வெற்றி அடிப்படையில் சொற்ப தொகையுடன் திரும்பியுள்ளன. இதிலும் பாவம் ஆப்கானிஸ்தான் தான். விளையாடிய 9 போட்டிகளிலும் தோற்றதால் ஆறுதல் பரிசுத்தொகையுடன் திரும்ப வேண்டியதாயிற்று என்றே கூறலாம்.

More News >>