140 நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை, 140 நாட்களுக்குப் பிறகு அந்நாடு நீக்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா இந்திய நாட்டு பயணிகள் விமான நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன.

காஷ்மீரின் புல்வாமாவில், கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது இந்திய விமானப் படை . பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் அதிர்ந்து போன பாகிஸ்தானும் தனது விமானப் படை விமானங்களை இந்திய எல்லைக்குள் அத்துமீறச் செய்து வாலாட்டியது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

போர்ப் பதற்றம் காரணமாக, கடந்த 26-ந் தேதி முதல் தனது நாட்டு வான்வழிப் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்தது பாகிஸ்தான்.இதனால், இந்தியாவில் இருந்து மேற்காசியா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவு அதிகரித்து, பயண நேரமும் கூடுதலானது. கூடுதல் எரிபொருள் செலவால் ஏர்-இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் இதுவரை சுமார் 580 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள இந்திய வான்வெளியில் விமானங்கள் பறக்க விதிக்கப்பட்ட தடையை விமானப் படை கடந்த மாதம் நீக்கியது. ஆனால், பாகிஸ்தான் மட்டும் தனது வான் எல்லையை யணிகள் விமான போக்குவரத்துக்கு திறக்கவில்லை.

பயணிகள் விமான போக்குவரத்துக்காக பாகிஸ்தான் தனது வான்வெளி பகுதியை திறக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் பயணிகள் விமானம் பறக்க விதிக்கப்பட்ட தடையை 140 நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் விலக்கிக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையால் ஏர் இந்தியா உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன.

விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம்.. 13 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு
More News >>