3 நிமிடங்களில் சாலைகளை தூய்மைப்படுத்தி மாணவர்கள் உலக சாதனை: தெலங்கானா அரசு அசத்தல்

ஐதராபாத்: மூன்றே நிமிடங்களில், 15 ஆயிரம் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து சாலைகளை தூய்மைப்படுத்திய செயல் உலக சாதனை படைத்து தெலங்கானா அரசுக்கு பெருமையை சேர்த்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலமாக பிரித்த பிறகு, கே.சி.சந்திரசேகர் ராவ் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு, மாநிலத்தை முன்னோடியாக கொண்டுவருவதற்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று தான் தூய்மை ஐதராபாத்.

தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தை தூய்மையாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று பள்ளி மாணவர்களைக் கொண்டு நகரை தூய்மைப்படுத்தும் பணியை அம்மாநில அரசு மேற்கொண்டது.

அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்த ஐதராபாத் நகரை 40 பகுதியாக பிரித்து, அங்கு பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் களத்தில் இறங்கினர். மாணவர்களை குழுக்களாக பிரித்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் சாலையை தூய்மைப்படுத்தும் பணியில் அவர்களை அனைவரும் ஒன்றாக ஈடுபட்டனர். இதனால், மூன்றே நிமிடங்களில் சாலைகள் சுத்தமானது.

இதற்கான நிகழ்ச்சியில், மாநில உள்துறை அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டி, துணை முதலமைச்சர் முகமது அலி, தொழில்நுட்ப துறை அமைச்சர் ராமாராவ் மற்றும் பெருநகர ஐதராபாத் மாநகராட்சி ஆணையர் ஜனார்த்தன் ரெட்டி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதற்கிடையே, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ள மாணவர்கள் இணைந்து ஐதராபாத் சாலைகளை தூய்மையாக்கியதை உலக சாதனையாக கின்னஸ் சாதனை புத்தகம் பதிவு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, தொழில்நுட்ப துறை அமைச்சர் ராமாராவ் கூறியதாவது: தூய்மை ஐதராபாத் திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பள்ளி மாணவர்களை இதில் ஈடுபடுத்தி உள்ளோம். திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் அவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த திட்டத்துக்கு உதவி செய்த மாணவர்களுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு கூறினார்.

More News >>