அக்டோபர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் ஓ.கே. சொன்னது சுப்ரீம் கோர்ட்

தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழியை ஏற்று உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை முடித்து கொண்டது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போது, சென்னை மாநகராட்சி வார்டுகளில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், ‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் நடைமுறைகளை சரியாக பின்பற்றவில்லை’ என்று கூறி, தேர்தல் அட்டவணையை ரத்து செய்தது. மேலும், புதிய அறிவிக்கை வெளியிட்டு அந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆணையம் மேல்முறையீடு செய்தது. அதன்பின், தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்காமலேயே காலம் கடத்தி வந்தது.

இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை, புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மக்களவைத் தேர்தல், புயல் என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு, இது வரை தேர்தல் நடத்தப்படவில்லை. உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, நீதிபதிகளும் ‘‘எப்போதுதான் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவீர்கள்?’’என்று கேட்டு பார்த்து விட்டனர்.

கடைசியாக, கடந்த 2 தினங்களுக்கு மன்பு, மாநில தேர்தல் ஆணையம் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ‘தேர்தல் நடத்துவதற்கு வரும் அக்டோபர் 31ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும்’’ என்று கோரியது.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இ்ன்று (ஜூலை 17) காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில், ‘அக்டோபருக்குள் வார்டு மறுவரையறை பணிகள் முழுமையாக முடிவடைந்து விடும். உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிக்கை, அக்டோபர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும்’’ என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தனர்.

'உள்ளாட்சி தேர்தலை நடத்தாவிட்டால் நிதி கிடையாது...!' மத்திய அமைச்சர் கறார்
More News >>