அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழுவுக்கு ஆக.1 வரை அவகாசம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு

அயோத்தி ராமஜென்மபூமி வழக்கில் மத்தியஸ்தர் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 1ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை நிர்மோகி அகோரா, சன்னி மத்திய வக்பு வாரியம், ராம்லல்லா ஆகிய 3 அமைப்புகள் பிரித்து கொள்வது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை உடனடியாக விசாரிக்க வேண்மென்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தொடர்ந்து வாதாடி வந்தார்.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு, இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி சுமுக முடிவு காண்பதற்காக மத்தியஸ்தர்கள் குழுவை அமைத்தது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, வாழும்கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகியோர் கொண்ட அந்த குழுவுக்கு, இப்ராகிம் கலிபுல்லா தலைைம வகிக்கிறார். இந்த குழு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி ஆகஸ்டு 15ம் தேதிக்குள் முடிவு எடுக்க அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மத்தியஸ்தர் குழு சரியாக செயல்படவில்லை என்று இந்து அமைப்புகள் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்தியஸ்தர் குழு வரும் 18ம் தேதியன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மத்தியஸ்தர் குழு அறிக்கையில் சுமுக முடிவு ஏற்படாவிட்டால், ஜூலை 25ம் தேதி முதல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை நாள்தோறும் விசாரணை நடத்தி முடிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்தியஸ்தர்கள் குழு இன்னும் சிலரிடம் சமரசம் பேச வேண்டியுள்ளதாக கூறி, கால அவகாசம் கேட்டது. இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் அனைவரிடமும் கருத்துக்களை கேட்டு, ஆகஸ்ட் 1ம் தேதி அறிக்கை தயாரித்து அளிக்க வேண்டும் என்று மத்தியஸ்தர்கள் குழுவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆகஸ்ட் 2ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்து ெகாள்ளப்படும் என்றும் அறிவித்தனர்.

அயோத்தி மத்தியஸ்தர் குழு 18ம் தேதி அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
More News >>