கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் காலமானார்

ஹோட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ராஜகோபால், உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

சரவணபவன் ஹோட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சரவணன் பவன் ராஜகோபாலுக்கு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ராஜகோபால் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் உச்சநீதிமன்றமும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து நீதிமன்றத்தில் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால் உடல்நிலை சரியில்லை என காரணம் கூறி சரணடைய அவகாசம் கோரி ராஜகோபால் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஜூலை 9-ந் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, அன்றைய தினமே தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்ட அவர், சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரண்டைந்தார். அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தண்டனைக் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க உத்தரவிடக்கோரி அவரது மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்.இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அனுமதி வழங்கினர். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் இன்று காலை 10.30 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

சாதாரண ஓட்டல் தொழிலாளியாக இருந்த ராஜகோபால், 1980 களில் சென்னை கே.கே.நகரில் சரவணவன் என்ற பெயரில் ஓட்டல் தொடங்கினார். தலைவாழை இலையில், பல்வேறு வகையான கூட்டு, பொரியல் என வயிறார முழுச் சாப்பாடு வழங்கிய விதம் சென்னைவாசிகளை வெகுவாக கவர்ந்தது. இதனால் இவருடைய சரவணபவன் ஓட்டல் கிளைகள் எண்ணிக்கை விறுவிறுவென 100-க்கும் மேல் பெருகி வெளிநாடுகளிலும் கூட சக்கை போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஓட்டலில் பணிபுரிந்த ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமாரின் மனைவி ஜீவஜோதியின் அழகில் மயங்கினார் ராஜகோபால். இடையூறாக இருந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ஆட்களை ஏவி தீர்த்துக் கட்டிய வழக்கில் தான் வசமாகச் சிக்கிக் கொண்ட ராஜகோபால், ஆயுள் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>