கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு

கர்நாடக சட்டப்பேரவையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவது தாமதமாகியுள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக காங்கிரஸ் பிரச்னை எழுப்பி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட மதிய உணவு இடைவேளைக்காக பேரவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்து கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணி அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று அறிவித்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சட்டப் பேரவை கூட்டம் தொடங்கியது.

இன்றைய சட்டப் பேரவைக் கூட்டத்தில் மொத்தமுள்ள 224 எம்எல்ஏக்களில் 204 பேர் மட்டுமே பங்கேற்றனர். 20 பேர் பங்கேற்கவில்லை. இதில் காங்கிரஸ், ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேருடன் சேர்ந்து நீ மந்த் படேல் என்ற காங்கிரஸ் எம்எல்ஏவும் புறக்கணித்தார். அரசுக்கு ஆதரவளித்து வந்த பகுஜன் கட்சி எம்எல்ஏ மகேஷ், 2 சுயேச்சைகள் மற்றும் பாஜகவின் ஒரு எம்எல்ஏ என மொத்தம் 20 பேர் சட்டப்பேரவையில் இன்று பங்கேற்கவில்லை.

இதனால் 103 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 100 பேரும், பாஜக தரப்பில் 104 எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து முதல்வர் குமாரசாமி உரையாற்றினார். அப்போது, கர்நாடகத்தில் இப்போது நிலவும் குளறுபடிகளுக்கு எல்லாம் பாஜக தான் காரணம் என குற்றம் சாட்டினார். என்னுடைய அரசு நீடிக்குமா? இல்லையா? என்பது பிரச்னையில்லை. ஆனால் சபாநாயகரின் அதிகாரம் கேள்விக்குறியாகியுள்ளது. முதலில் இந்தப் பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய, காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமய்யா, கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறித்து விவாதிக்க வேண்டும். கொறடா உத்தரவின் முக்கியத்துவத்தை, சீர்குலைப்பதை ஏற்க முடியாது. எங்கள் கட்சியின் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரான எனக்கு, எனது அதிகாரத்தை செயல்படுத்தக் கூடாது என்று கூறுவதை ஏற்க முடியாது. உடனடியாக சட்ட மன்ற அலுவல்களை ஒத்தி வைத்து கொறடா உத்தரவு பற்றி விவாதிக்க வேண்டும் என நீண்ட நேரம் பேசினார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பாவும், பாஜக எம்எல்ஏக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பானது. அப்போது குறுக்கிட்ட எடியூரப்பா, திட்டமிட்டே வாக்கெடுப்பு நடத்தாமல் காலம் கடத்த முயற்சிக்கிறீர்கள். இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார். ஆனாலும் சித்தராமய்யா நீண்ட நேரம் பேசினார். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது. சித்தராமய்யாவுக்கு ஆதரவாக டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் பேசினர்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவது காலதாமதமானது.காங்கிரஸ் உறுப்பினர்கள், கொறடா உத்தரவு குறித்து உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்பதையே தொடர்ந்து வலியுறுத்தினர்.இந்நிலையில் 1.45 மணியளவில் மதிய உணவுக்காக சட்டப்பேரவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். மீண்டும் 3 மணிக்கு சபை கூட உள்ள நிலையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா? என்ற சந் தேகமும் எழுந்து, கர்நாடக அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்துள்ளது.

'கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு யாருக்கு சாதகம்..?' ஆபரேசன் 'தாமரை' தோல்வி - காங்; தார்மீக வெற்றி - பாஜக
More News >>