அருவியில் மூழ்கி உயிரிழந்தவர்களை பைக்கில் தூக்கிச் சென்ற நண்பர்கள்!

தடா நீர்வீழ்ச்சியில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த 2 இளைஞர்களின் உடலை நண்பர்கள் பைக்கில் வைத்து கொண்டு சென்றது தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்து வருகின்றனர்.

சென்னை மூலக்கடை மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள தடா அருவிக்கு குளிக்கச் சென்றனர். அப்போது யஷ்வந்த் என்ற பொறியியல் மாணவர் ஆழமான பகுதியில் சிக்கி தத்தளித்தார்.

அவரை காப்பாற்ற சென்ற யாசின் என்பவரும் நீரில் மூழ்கினார். இதைக் கண்ட மற்ற மூவரும் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உடல்களை பைக்கில் வைத்து சென்னையை நோக்கி கொண்டு வந்தனர்.

அப்போது திருப்பதி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை பிடித்து உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை ஏன் சென்னைக்கு கொண்டு சென்றனர் என்பது குறித்து 3 பேரிடம் விசாரித்து வருகிறனர்.

More News >>