சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பில்லை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் அலறல்

சிலை கடத்தலில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்பு என வெளியான செய்திக்கு, அமைச்சர்கள் இருவரும், தங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சிலை கடத்தல் வழக்கில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து உரிய ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6-ந் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பொன் மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் யாருடைய பெயரையும் குறிப்பிடாத நிலையில், தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனால் பதறிப்போன அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இன்று மாலை அவசரமாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், சிலைக் கடத்தலில் எங்களுக்கு தொடர்பு இல்லை. சிலை கடத்தலில் எங்களுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய்

பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில், எங்கள் பெயரைக் குறிப்பிட்டு, தனியார் தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது.அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் எங்கள் மீது திட்டமிட்டு பொய்யான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த தொலைக்காட்சி மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்க இருக்கிறோம் என அமைச்சர்கள் இருவரும் தெரிவித்தனர்.

More News >>