வைகோ எம்பியான மகிழ்ச்சி ஒரு ரூபாய் டீ விற்ற மதிமுக தொண்டர்கள்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறார். இந்த மகிழ்ச்சியை மதிமுக தொண்டர்கள் பலர், ஒரு ரூபாய்க்கு டீ, வடை விற்று கொண்டாடியிருக்கிறார்கள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாநிலங்களவைக்குள் நுழைந்திருக்கிறார் வைகோ. இது, மதிமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே வீரியன்கோட்டை என்ற கிராமத்தில் முத்துலட்சுமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவரது கணவர் வெள்ளைச்சாமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார். அவர் கடைசி வரை வைகோவின் தீவிர விசுவாசியாக இருந்தார். மதிமுகவில் ஒன்றிய துணை செயலாளராக இருந்தார். அது மட்டுமல்ல. தனது இரு மகன்களுக்கும் பிரபாகரன், பாலசிங்கம் என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் பெயர்களைத்தான் வைத்திருக்கிறார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்குள் வைகோ மீண்டும் காலடி எடுத்து வைத்ததை கொண்டாடும் வகையில் நேற்று(ஜூலை25) முத்துலட்சுமி தனது கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்றார். வழக்கமாக, இவரது கடையில் டீ 5 ரூபாய்க்கு விற்கப்படும். மதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மட்டுமின்றி மக்களும் முத்துலட்சுமியின் கடையில் ஒரு ரூபாய்க்கு டீ வாங்கி குடித்து மகிழ்ந்தனர்.

பாலசிங்கம் கூறுகையில், ‘‘எனது தந்தை சாகும் வரை வைகோவின் விசுவாசியாக இருந்தார். அதனால் நாங்கள் வைகோ மீண்டும் எம்பியானதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்’’ என்றார்.

முத்துலட்சுமி போல் டீக்கடை வைத்திருக்கும் மதிமுக தொண்டர்கள் பலரும் நேற்று ஒரு ரூபாய்க்கு டீ, வடை விற்றனர். பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் முத்தையன் கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்கப்பட்டது. கரூரில் ஒரு தொண்டர் அப்படி விற்றார். குளித்தலையில் பெரிய பாலம் அருகே கடை வைத்திருக்கும் ரகுபதியும், ஒரு ரூபாய்க்கு டீ விற்றார். மதிமுகவினரின் மகிழ்ச்சியால் நிறைய பேருக்கு ஒரு ரூபாய் டீ குடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நாடாளுமன்றத்தில் வைகோ; வசைபாடிய சுவாமி வாழ்த்து

More News >>