கர்நாடகாவில் அடுத்த திருப்பம் முதல்வராகிறார் எடியூரப்பா - மாலை 6 மணிக்கு பதவியேற்பு

கர்நாடக அரசியலில் அடுத்த திருப்பமாக எடியூரப்பாவை முதல்வர் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்கும் எடியூரப்பாவை, ஒரு வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கெடு விதித்துள்ளார்.

கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் ராஜினாமாவால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான குமாரசாமி கடந்த வாரம் சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். நான்கு நாட்களாக ஜவ்வாக இழுத்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் முடிவில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வாக்கெடுப்பு எம்எல்ஏக்களும், எதிராக 105 பேரும் வாக்களித்ததால், குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

இந்நிலையில், கூடுதல் எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை வைத்துள்ள பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரும். எடியூரப்பா முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக மேலிட மோ இதற்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்க மறுத்து விட்டதால், கடந்த 2 நாட்களாக கர்நாடக அரசியலில் கடும் அமைதி நிலவியது. ஆனால் நேற்றிரவு அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், 3 எம்எல்ஏக்களை அதிரடியாக சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் கர்நாடக பாஜக மூத்த நிர்வாகிகள் கொண்ட ஒரு குழுவினர் நேற்று டெல்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தனர். நேற்று இரவு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் கர்நாடக பாஜக தலைவர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க உரிமை கோர பாஜக மேலிடம் பச்சைக் கொடி காட்டியதாகத் தெரிகிறது.

இதனால் இன்று காலை கர்நாடக அரசியலில் மீண்டும் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறின. மாநில ஆளுநர் வஜுபாய் வாலாவை, பாஜக தலைவர் எடியூரப்பா நேரில் சந்தித்தார். பாஜக எம்எல்ஏக்கள் 105 பேரின் ஆதரவுப் பட்டியலைக் கொடுத்து ஆட்சியமைக்க எடியூப்பா உரிமை கோரினார். இதையடுத்து எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர், ஒரு வாரத்திற்குள் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு கர்நாடக மாநிலத்தின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்பது இது 4 - வது முறையாகும். கடந்த 2007-ல் முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற போது, மெஜாரிட் டியை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். 2008-ல் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று 2-வது முறையாக எடியூப்பா முதல்வரானார்.

3 வருடங்கள் முதல்வராக இருந்த நிலையில், ஊழல் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால் பதவி விலகினார். பின்னர் கடந்தாண்டு இதே 105 எம்எல்ஏக்கள் பலத்தைக் காட்டி, 3-வது முறையாக முதல்வரான எடியூரப்பா, மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல், பதவியேற்ற இரண்டரை நாட்களில் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், மொத்தம் 224 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், 105 பாஜக எம்எல்ஏக்கள் பலத்துடன் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனாலும் காங்கிரஸ் - மஜத கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் ராஜினாமாவால் பாஜகவுக்கு சற்று தெம்பு கிடைத்துள்ளது. சபாநாயகர், இந்த 15 பேரின் ராஜினாமாவை ஏற்றாலோ அல்லது தகுதி நீக்கம் செய்தாலோ சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பலம் குறைந்து பாஜக மெஜாரிட்டி பெற்று விடும். என்றாலும் இடைத்தேர்தலில் பெறும் வெற்றியைப் பொறுத்தே பாஜகவுக்கு நிம்மதி கிடைக்கும்.

காங்கிரசுக்கு வாக்களித்த 2 பாஜக எம்எல்ஏக்கள்; ‘கர் வாப்சி’ என்று சிந்தியா விமர்சனம்

More News >>